கர்நாடகா உதயமான நாள் விழா- கன்னடத்தில் பேசிய ரஜினிகாந்த்- நன்றி சொன்ன முதல்வர் பசவராஜ் பொம்மை!
பெங்களூர்: கர்நாடகா தனி மாநிலம் உதயமான நாள் விழாவில் பங்கேற்று கன்னடத்தில் பேசிய நடிகர் ரஜினிகாந்துக்கு அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை சமூக வலைதளங்களில் நன்றி தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1-ந் தேதி கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மொழிகளின் அடிப்படையில் புதிய மாநிலமாக உருவாகின. அதற்கு முன்னர் சென்னை மாகாணம் உள்ளிட்ட மாகாணங்களுடன் இணைந்த பகுதிகளாக இருந்தன.
ஆகையால் சென்னை மாகாணம் அதாவது இன்றைய தமிழ்நாடு தவிர்த்த, இம்மாநிலத்தில் இருந்து பிரிந்து தனி மாநிலங்களாக உதமயாகியவை நவம்பர் 1-ந் தேதியை கொண்டாடி வருகின்றன. கர்நாடகாவில் மாநிலம் உதயமான நவமப்ர் 1-ந் தேதி பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம்.
'அரை கி.மீ தான் நடந்தார்'.. எந்த தாக்கமும் இருக்காது.. சோனியாவை விமர்சித்த பசவராஜ் பொம்மை
கர்நாடகா ரத்னா விருது
இந்த ஆண்டும் கர்நாடகா மாநில அரசால் பெங்களூரில் 67-வது ஆண்டு மாநிலம் உதயமான நாள் கொன்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 46 வயதில் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு, கர்நாடகா ரத்னா விருது வழங்கப்பட்டது. இவ்விருதை புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி பெற்றுக் கொண்டார்.
ரஜினிகாந்த், ஜூனியர் என்டிஆர்
இவ்விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கொட்டும் மழையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கேற்க தனி விமானம் மூலம் ரஜினிகாந்த், பெங்களூர் சென்றார். இந்நிகழ்வில் கன்னடத்தில் பேசிய ரஜினிகாந்த், மிக குறுகிய காலத்திலேயே திரைத்துறையில் சாதனைகளை நிகழ்த்தியவர் அப்பு (புனித் ராஜ்குமார்) என புகழாரம் சூட்டினார்.
கர்நாடகா மக்களுக்கு வாழ்த்து
மேலும் கர்நாடகா மக்களுக்கு மாநில உதயநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார் ரஜினிகாந்த். அத்துடன் தற்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு இறைவன் அருள் இருக்கிறது. புனித் ராஜ்குமாரின் இறைவனின் பிள்ளை என்றார். அத்துடன் ஜாதி மத பேதங்களின்றி அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்று கூறியதுடன் வாழவைக்கும் தெய்வங்களாகிய தமிழ் மக்களுக்கும் நன்றி என்றார் ரஜினிகாந்த். அதேபோல் ஜூனியர் என்.டி.ஆரும் கன்னட மொழியில் பேசினார்.
பாராட்டி தள்ளிய பசவராஜ் பொம்மை
இதனைத் தொடர்ந்து கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை சமூகவலைதளங்களில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், சிறந்த நடிகர்களான ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர், கர்நாடகாவுக்கு வந்து புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகா ரத்னா விருது வழங்கினர். மேலும் கன்னட மொழியில் பேசி தங்களது கன்னட மொழியின் மீதான அன்பையும் அவர்கள் வெளிப்படுத்தினர். என் இதயத்தின் அடிமனதில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.