பல முனையிலும் அச்சுறுத்தல்.... ஆனா ஒருபய தொடமுடியாது... நாம எப்பவும் அலர்ட்.... ராஜ்நாத் சிங் உறுதி!
பெங்களூரு: இந்தியா பல முனைகளில் இருந்து அச்சுறுத்தல்களையும் சவால்களையும் எதிர்கொள்கிறது. ஆனாலும் அதனை சமாளிக்க எந்த நேரமும் விழிப்புடன் உள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
மத்திய அரசு, பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரித்துள்ளதால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஒரு ஊக்க சக்தியாக செயல்படும் என்று அவர் பேசினார்.
அடுத்த 7-8 ஆண்டுகளில் ராணுவத்தை நவீனப்படுத்த 130 பில்லியன் டாலர்களை செலவிட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1979க்கு பிறகு.. ஈரான் பாதுகாப்பு அமைச்சர் வருகை.. மறுபக்கம் அமெரிக்கா.. பெங்களூர் மீது மொத்த கவனம்!
போர் விமானங்கள் சாகசம்
இந்திய பாதுகாப்புத் துறையின் 13-வது சர்வதேச விமான கண்காட்சி கர்நாடகா மாநிலம் பெங்களூரு எலஹங்கா விமானப்படைத் தளத்தில் இன்று தொடங்கியது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் இந்தியாவின் அதிநவீன போர் விமானங்கள் சாகசம் செய்து வருகின்றன.
ராணுவம் நவீனமயமாகும்
கண்காட்சியை தொடங்கி வைத்த ராஜ்நாத் சிங் பேசியதாவது:- நாட்டின் பாதுகாப்பு எந்திரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். பெரிய மற்றும் சிக்கலான பாதுகாப்பு தளங்களின் உள்நாட்டு உற்பத்தி இப்போது 'ஆத்மனிர்பார் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ் நமது கொள்கையின் மையமாக மாறியுள்ளது. அடுத்த 7-8 ஆண்டுகளில் ராணுவத்தை நவீனப்படுத்த 130 பில்லியன் டாலர்களை செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு
மத்திய அரசு பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை தானியங்கி முறை(Automatic Route) வழியாக 74% ஆகவும், அரசு முறை(Government route) வழியாக 100% ஆகவும் உயர்த்தியுள்ளது, இது வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஒரு ஊக்க சக்தியாக செயல்படும்.இந்திய விமானப்படைக்கு 83 தேஜஸ் எம்கே 1 ஏ ரக போர்விமானங்கள் தயாரிக்க எச்ஏஎல் நிறுவனத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி மதிப்பு ஒப்பந்தம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
பயங்கரவாதம் உலகளாவிய அச்சுறுத்தல்
'மேக் இன் இந்தியா" திட்டத்தில், பாதுகாப்பு துறையில் கிடைத்த மிகப்பெரிய ஒப்பந்தம் இதுவாகும். பயங்கரவாதம் இப்போது உலகளாவிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியா பல முனைகளில் இருந்து அச்சுறுத்தல்களையும் சவால்களையும் எதிர்கொள்கிறது. நமது மக்களையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக எந்தவொரு தவறான செயலையும் எதிர்கொள்ளவும் தோற்கடிக்கவும் இந்தியா விழிப்புடன் உள்ளது என்று ராஜ்நாத் சிங் பேசினார்.