அடுத்த ஷாக்.. வீட்டுக்கு முன்பு நிறுத்தி வைக்கும் காருக்கு ரூ.5000 வரி! பெங்களூர் மாநகராட்சி பிளான்
பெங்களூர்: பெங்களூரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், மாநகராட்சி புதிய பார்க்கிங் கொள்கையை கடைப்பிடிக்க உள்ளது. இதன்படி வீட்டு முன்பு நிறுத்தப்படும் கார்களுக்கு ஆண்டுக்கு ரூ 5 ஆயிரம் வரி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சிலிக்கான் சிட்டி என்று அழைக்கப்படும் நகரம் பெங்களூர். நாட்டில் வேலை தேடி செல்லும் ஐடி ஊழியர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் முக்கிய நகரங்களில் ஒன்று பெங்களூரு என்றால் மிகையாது.
அந்த அளவுக்கு அங்கு ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதனால், புதிதாக வேலை தேடி செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது.
''ஆந்தை அருகில் ஒரு அழகான பெண்ணின் முகம் இருக்கிறது''.. 7 செகண்ட் டைம்.. கண்டுபிடிச்சா நீங்க கிரேட்!
போக்குவரத்து நெரிசல்
இதுஒருபுறம் இருக்க பெங்களூர் நகரத்தில் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் சாலை போக்குவரத்து குறித்து சொல்லவே வேண்டாம். பீக் நேரங்கள் என்று சொல்லப்படும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் பெங்களூரில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. மெட்ரோ ரயில் சேவை இருந்தாலும் சாலைகளில் கார்களின் அணிவகுப்பு குறைந்தபாடில்லை.
வீட்டு முன்பு
சாலைகளில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்துவது, வீடுகளுக்கு முன்பு நிறுத்துவது வாகன போக்குவரத்து நெரிசலுக்கு மிக முக்கிய காரணமாக விளங்குகிறது. பெங்களூரில் உள்ள வணிக வளாகங்கள், கடை வீதிகள், உணவகங்களுக்கு வரும் பொதுமக்கள் தங்களின் கார்களை அப்படியே நிறுத்திவிட்டு செல்வது வாகன போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக போக்குவரத்து போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.
இன்னும் மோசமாகும்
இது ஒருபக்கம் என்றால், தங்கள் வீட்டு முன் வரிசையாக கார்களை நிறுத்திவிடுவதால், அங்கும் வாகன ஓட்டிகள் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தாலும் இதற்கு முற்றுப்புள்ளிவைக்க முடியவில்லை. இப்படியே சென்றால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசல் நிலைமை இன்னும் மோசமாகும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கர்நாடக அரசு யோசித்து வருகிறது.
கட்டணம் வசூலிக்க திட்டம்
இதற்கு மத்தியில் கடந்த 2012 ஆம் ஆண்டே பெங்களூர் மாநகராட்சி சார்பில் புதிய போக்குவரத்து கொள்கை கொண்டு வரப்பட்டு இருந்தது. ஆனால், அது தீவிரமாக நடைமுறப்படுத்தவில்லை. தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், அந்த புதிய போக்குவரத்து கொள்கையை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, பெங்களூர் மாநகராட்சியில் சாலைகளில் நிறுத்தப்படும் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும். சாலைகளை ஏ,பி,சி,டி என பிரித்து அதற்கேற்றவாறு கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கார்களுக்கு 5 ஆயிரம்
இதன்படி பார்த்தால், வீட்டு முன்பு நிறுத்தப்படும் கார்களுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் வரையும், 3 சக்கர வாகனங்களுக்கு அதற்கு சற்று குறைவாகவவும் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. மோட்டார் சைக்கிள்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா? என்பது குறித்து தெரியவில்லை. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக டெண்டருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் விருப்பம் உள்ள நிறுவனங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று டெண்டர் அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெங்களூர் மாநகராட்சியில் புதிய பார்க்கிங் கொள்கை விரைவில் அமலுக்கு வரும் என்றே தெரிகிறது.