10 நதிகளுக்கு மேல் சர்ரென்று பறக்கலாம்.. வருகிறது பெங்களூர்-புனே எக்ஸ்பிரஸ் சாலை! முழுவிபரம்
பெங்களூர்: மகாராஷ்டிரா மாநிலம் புனேவையும், கர்நாடகா மாநிலம் பெங்களூரையும் இணைக்கும் வகையில் 699 கிலோமீட்டர் தொலைவுக்கு புனே-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் திட்டம் ரூ.50 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்பட உள்ளது. 10 ஆறுகளின் வழியே அமையும் இந்த நெடுஞ்சாலையால் பெங்களூர்-மும்பை-புனே இடையேயான பயண தொலைவும், நேரமும் குறைய உள்ளது.
இந்தியாவில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு நிதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில் தான் தற்போது கர்நாடகா மாநிலம் பெங்களூரையும், மகாராஷ்டிரா மாநிலம் புனேவை இணைக்கும் வகையில் புனே-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கட்டாயம்.. ஹலோவுக்கு பதில் ‛வந்தே மாதரம்’ சொல்லுங்க.. மகாராஷ்டிரா அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு
3 நகரங்களை இணைக்கும் திட்டம்
இந்த சாலையானது புனே ரிங் ரோட்டில் உள்ள கஞ்சாலேயிலிருந்து தொடங்கி பெங்களூரின் முத்தகடஹள்ளி வரை அமைக்கப்பட உள்ளது. இந்த பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டம் மூலம் பெங்களூர், மும்பை, புனே ஆகிய முக்கிய 3 நகரங்கள் ஒன்றாக இணைக்கப்பட உள்ளது. இதனால் வர்த்தக உறவு மேம்படுத்தப்படும்.
ரூ.50 ஆயிரம் கோடி திட்டம்
மேலும் 3 நகரங்களுக்கு இடையேயான பயண நேரமும், பயண தொலைவும் பெருமளவு குறைய உள்ளது. புனே-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடி செலவில் 699 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிதாக ரோடு அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலை மூலம் தற்போதைய பிற சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
விரிவான திட்ட அறிக்கை
இந்த திட்டத்துக்கான பூர்வாங்க ஆய்வு மற்றும் பணி முன் ஒப்புதல் வேலைகள் முடிக்கப்பட்டுள்ளன. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு டிசம்பர் மாதம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
95 கிலோமீட்டர் குறைவு
இந்த திட்டம் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் புனே-பெங்களூர் இடையேயான பயண தொலைவு 95 கிலோமீட்டர் வரை குறையும். அதோடு தற்போது பெங்களூரில் இருந்து மும்பைக்கு செல்ல 12 முதல் 14 மணிநேரம் ஆகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் வெறும் 7 முதல் 8 மணிநேரத்தில் பெங்களூர்-மும்பை இடையே பயணம் செய்ய முடியும்.
12 மாவட்டங்கள் வழியாக..
புனே-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலையானது மொத்தம் 12 மாவட்டங்கள் வழியாக செல்ல உள்ளது. இதில் 3 மாவட்டங்கள் மகாராஷ்டிராவிலும், 9 மாவட்டங்கள் கர்நாடகாவிலும் உள்ளன. அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் புனே, சதாரா, சாங்லி, கர்நாடகா மாநிலம் பெலகாவி, பாகல்கோட்டை, கதக், கொப்பல், பல்லாரி, தாவணகெரே, சித்ரதுர்கா, துமகூரு, பெங்களூர் புறநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக இந்த அதிவிரைவுச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
10 நதிகளை கடக்கும் சாலை
இந்த புதிய எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தின் மொத்தம் 55 மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் மரங்களை வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு வரும் காலத்தில் சாலையை விரிவுப்படுத்தும் வகையில் 15 மீட்டர் மீடியன் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையானது 10 நதி கடந்து செல்லும். அதன்படி நீரா, ஏரலா, சந்த் நதி, அக்ராணி, கிருஷ்ணா, கட்டபிரபா, மல்லபிரபா, துங்கபத்ரா, சிக்க ஹகாரி மற்றும் வேதவத் ஆகிய நதிகளை கடந்து செல்லும். இது சாலையில் பயணம் செய்பவர்களின் கண்களுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.