இ பாஸ் தேவையில்லை.. அப்படியும் கர்நாடகாவிற்குள் தமிழக வாகனங்கள் நுழைய முடியவில்லை.. ஏன் தெரியுமா?
பெங்களூர்: பெங்களூரு உள்ளிட்ட கர்நாடகாவில் ஏதாவது ஒரு பகுதியில் நீங்கள் வேலை பார்ப்பவரா? தமிழகம் சென்ற இடத்தில் லாக்டவுன் காரணமாக சிக்கிக் கொண்டு பழையபடி வேலைக்கு திரும்ப முடியாமல் தவிர்ப்பவரா? ஆம்.. என்றால்.. இந்த நிலைமை இன்னும் பல நாட்கள் தொடரத்தான் செய்யும் என்கிறது கர்நாடக களநிலவரம்.
Recommended Video
பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், கணிசமாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா வைரஸ் காரணமாக இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர்.
இப்போது, ஐடி நிறுவனங்கள் தங்கள் பணிகளை துவங்கி விட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து பெங்களூரு நகர முடியாமல் தவிக்கிறார்கள் ஊழியர்கள்.
4 தாத்தாக்களின் வெறியாட்டம்.. குமரியை உலுக்கிய பாலியல் வன்கொடுமை.. வைரலாகும் #justice_for_daughter
இ பாஸ் தேவையில்லை
தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதைக் காரணம் காட்டி, தமிழக வாகனங்களை உள்ளேயே விட மாட்டோம் என்று, முன்பு ஒருமுறை அறிவித்தது கர்நாடக அரசு. ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. சேவா சிந்து என்ற வெப்சைட்டில் சென்று உங்களைப் பற்றிய விபரங்களை பதிவு செய்தால் போதும். பாஸ் தேவையில்லை. கர்நாடகாவிற்குள் வரலாம் என்ற தளர்வு அறிவிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மட்டும் இந்த தளர்வு பொருந்தாது. தமிழகம் உள்ளிட்ட பிற அனைத்து மாநிலங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என்று அறிவித்தார் முதல்வர் எடியூரப்பா.
சேவா சிந்து வெப்சைட்
ரொம்ப சுலபம் ஆகிவிட்டது.. உடனடியாக பெங்களூர் கிளம்பிவிட வேண்டியதுதான், என்று நினைத்து சேவா சிந்து வெப்சைட்டில், பதிவு செய்ய சென்றவருக்கு காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி. ஏனெனில், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு வாகனம்தான் கர்நாடகாவிற்கு செல்வதற்கு, சேவா சிந்து வெப்சைட் மூலமாக அனுமதி வழங்கப்படுகிறது. அந்தவகையில் அடுத்த 10 நாட்களுக்கான ஸ்லாட் காலியாகவே இல்லை.
ஒசூர் எல்லை
பதிவு செய்வதற்காக முயற்சி செய்தவர்களுக்கெல்லாம் ஸ்லாட் இல்லை என்றுதான் பதில் வருகிறது. தமிழகத்தில் இருந்து ஓசூர் வழியாக கர்நாடகா எல்லைக்குள் வருவதற்கு அத்திபெலே என்ற பகுதியில் செக்போஸ்ட் உள்ளது. இந்த வழியைதான் பெரும்பாலான கேரள மக்களும் பயன்படுத்துகிறார்கள். இது தவிர, ஆந்திர மாநிலம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து பெங்களூருக்கு வரக்கூடிய எல்லையாக பாஹேபள்ளி செக்போஸ்ட் உள்ளது. அங்கு ஜூன் 12ஆம் தேதி வரை ஸ்லாட் கிடையாது. அத்திபெலே செக்போஸ்ட்டை பொருத்தளவில் வரும் 17ம் தேதி வரை ஸ்லாட் இல்லை.
பதிவு செய்த விவரம் காண்பிப்பது கட்டாயம்
எல்லைக்கு வரும்போது சேவா சிந்து வெப்சைட்டில் நீங்கள் பதிவு செய்ததற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்பதால், பதிவு செய்யாமல் யாரும் பெங்களூருக்கு கிளம்பி வந்து விட வேண்டாம். அப்படி வந்தால் எல்லையிலேயே அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். இதுபற்றி சேலத்தை சேர்ந்த தம்பிதுரை என்ற பெங்களூரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு ஐடி ஊழியர் கூறுகையில், லாக்டவுன் அமலுக்கு வருவதற்கு முன்பாக சேலம் வந்தேன். இப்போது பணிக்காக பெங்களூர் திரும்ப வேண்டி உள்ளது. ஆனால் சேவா சிந்து வெப்சைட்டில் ஸ்லாட் கிடைக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் கூட ஸ்லாட் கிடைக்காததால் பணிக்கு திரும்ப முடியாத சூழ்நிலை உள்ளது என்று தெரிவிக்கிறார்.
வீண் அலைச்சல்
எனவே சேவா சிந்து வெப்சைட்டில் உங்களால் பதிவு செய்ய முடிந்தால், அதன் பிறகு நீங்கள் கர்நாடகா வருவதற்கு யோசிக்கலாமே தவிர, முன்கூட்டியே வருவது, வீண் அலைச்சலையும், மன உளைச்சலையும் தான் ஏற்படுத்தும் என்பது தான் நிலவரம். கைக்கு எட்டியும், வாய்க்கு எட்டாத நிலைமை என்பது இதுதான்.