இறந்ததாக கருதப்பட்டவர் உயிரோடு வந்த அதிசயம்.. பேய் என அலறியடித்து ஓடிய மக்கள்.. உறவினர்கள் அதிர்ச்சி
பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 3 மாதத்திற்கு முன்னர் இறந்து, சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டதாக கருதப்பட்டவர் உயிரோடு வந்ததால் கிராம மக்கள் அலறி அடித்து ஓடினர்.
Recommended Video
3 மாதத்திற்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை உறுதிபடுத்திய உறவினர்கள் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்துவிட்டனர்.
மாவட்ட நிர்வாகமே இறந்தவர் பெயரில் இறப்புச் சான்றிதழ் வழங்கிவிட்ட நிலையில் தற்போது அவர் உயிரோடு வந்துவிட்டதால் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்டது யார் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மதுபோதைக்கு அடிமை
கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டம் மதுகிரி தாலூகாவிற்குட்பட்ட சிக்கமாலூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராஜப்பா. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளாக இருக்கும் பிரேமலதா என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார். இளைய மகள் நேத்ரா பெங்களூருவில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். கூலி தொழில் செய்து வரும் நாராஜப்பா மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. 59 வயதான முதியவரான நாராஜப்பா மது குடித்து விட்டு வந்த அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. மனைவியும் இல்லாத நிலையில் மூத்த மகளிடம் கோபித்துக்கொண்டு பெங்களூருவில் உள்ள இளைய மகள் வீட்டிற்கு செப்டம்பர் 10ம் தேதி சென்றுள்ளார்.

இறந்தது தந்தை என கூறிய மகள்
மேலும் பெங்களூருவில் அடிக்கடி இளையமகளிடம் பணம் கேட்டு வாங்கி மது குடித்து வந்துள்ளார். இதற்கிடையே நாராஜப்பா போலவே ஒருவர் சாலையில் குடிபோதையில் மயங்கிக் கிடப்பதாக நேத்ராவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற நேத்ரா மயங்கிக் கிடப்பது தன்னுடைய தந்தை என உறுதி செய்தார். இதை அடுத்து மீட்கப்பட்ட அவர் முதலில் நிமான்ஸ் மருத்துவமனையிலும் பின்னர் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவிலும் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் நேத்ராவுக்கு தகவல் அளித்தது. பின்னர் கோரமங்கலம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அவருடைய உடல் தும்கூர் மாவட்டத்திற்குட்பட்ட மதுகிரி கிராமத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ஒரு சில வாரங்களுக்குப் பின்னர் தும்கூர் மாவட்ட நிர்வாகம் நாராஜப்பா இறந்துபோனதற்கான ஆவணமாக இறப்பு சான்றிதழும் வழங்கியது.

இறந்தவர் உயிரோடு வந்தார்
இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டதாக கூறிய நபர் மதுரகிரி கிராமத்திற்கு வந்துள்ளார். இதை பார்த்த கிராம மக்கள் பயந்து ஓடினர். வந்திருப்பது நாராஜப்பாவின் ஆவியாக இருக்கலாம் அல்லது பேயாக இருக்கலாம் எனக் கூறிக்கொண்டே அலறி அடித்து ஓடினர். இதனால் ஆச்சரியம் அடைந்த நாராஜப்பா அவரது வீட்டிற்கு சென்றபோது மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து விளக்கு ஏற்றப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த மகள் மற்றும் உறவினர்கள் இவரை பார்த்து அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்தனர். இதுகுறித்து உறவினர்களிடம் கூறிய நாராஜப்பா, தான் குடிபோதையில் மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து தப்பித்து விட்டதாகவும், மகள் மீது இருந்த கோபத்தினால் பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்துவிட்டு தற்போது ஊருக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வருவாய்த்துறை விசாரணை
நாராஜாப்பா இறந்துவிட்டதாக சான்றிதழ் வழங்கிய மாவட்ட நிர்வாகம், அப்போது உண்மையில் அடக்கம் செய்யப்பட்டது யாரை என விசாரித்து வருகின்றனர். எது எப்படியோ இனிமேலாவது குடிபோதைக்கு அடிமையாகாமல் நாராஜாப்பா திருந்தி வாழ்வார் என்று கிராம மக்கள் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications