பெங்களூர்.. தொழுகை நேரத்தில் ஹனுமான் பாடல் ஒலிக்கவிட்ட கடைக்காரர் மீது தாக்குதல்.. பாஜக கொதிப்பு
பெங்களூர்: பெங்களூரில் தொழுகை நேர பாங்கு ஒலிக்கும்போது அனுமன் பாடலை ஒலிபெருக்கியில் ஒலிக்கவிட்ட கடைக்காரர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ள நிலையில் பாஜக கொதித்தெழுந்துள்ளது.
பெங்களூர் அல்சூர் கேட் போலீஸ் எல்லைக்குட்பட்ட கப்பன்பேட்டை பகுதியில் சித்தனஹள்ளி உள்ளது. இங்கு முகேஷ் என்பவர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் நேற்று மாலையில் வழக்கம்போல் முகேஷ் தனது கடையில் அமர்ந்திருந்தார்.

அந்த சமயத்தில் முகேஷ் கடையில் அனுமன் பாடல்கள் ஒலித்து கொண்டிருந்தது. இந்த சத்தம் கேட்டு சாலையில் சென்ற சில இளைஞர்கள் அவரது கடைக்கு வந்தனர்.
அந்த இளைஞர்கள் முகேஷிடம், ‛‛இது மசூதியில் பாங்கு ஒலிக்கும் நேரம். கடையில் அனுமன் பாடல்களை இசைக்க கூடாது. உடனடியாக ஆஃப் செய்ய வேண்டும்'' எனக்கூறியுள்ளனர். இதை கேட்ட முகேஷ் அவர்களுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தார். ஆனால் அந்த இளைஞர்கள் உடனடியாக அனுமன் பாடலை நிறுத்த வேண்டும் எனக்கூறியுள்ளனர். இதையடுத்து கடையின் இருக்கையில் இருந்த முகேஷ் எழுந்து சென்று அந்த இளைஞர்களை அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளார்.
இந்த வேளையில் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், முகேசின் சட்டையை பிடித்து இழுத்தார். இதையடுத்து அந்த இளைஞர்கள் மற்றும் முகேசுக்கு இடையே வாய்த்தகராறு முற்றி கைக்கலப்பானது. மாற்றி மாற்றி தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து இளைஞர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். தாக்குதலில் காயமடைந்த முகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுபற்றி முகேஷ் கூறுகையில், ‛‛நேற்று கடையில் அனுமன் பாடல்கள் இசைக்கப்பட்டது. அப்போது 4 முதல் 5 இளைஞர்கள் கடைக்கு வந்து இது மசூதியில் பாங்கு ஒலிக்கும் நேரம். இதனால் அனுமன் பாடலை நிறுத்தும்படி கூறி தகராறு செய்தனர். அனுமன் பாடலை தொடர்ந்து ஒலிக்க செய்தால் தாக்குவதாகவும் மிரட்டினர். அதோடு என்னை தாக்கியதோடு, கத்தியால் குத்துவாக மிரட்டினர்'' என்றார்.
மேலும் அவர் சம்பவம் தொடர்பாக அல்சூர் கேட் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சட்டப்பிரிவு 504 (அமைதிக்கு சீர்குலைக்கும் நோக்கத்தில் பிரச்சனை செய்தால்), 307 (கொலை முயற்சி) உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விசாரணை நடத்திய போலீசார் 20 முதல் 23 வயதுக்குட்பட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே தான் முகேஷிடம் தகராறு செய்து அவரை தாக்குவது கடையில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடகா எதிர்க்கட்சி தலைவர் (பாஜக) ஆர் அசோக், பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக எம்பி தேஜஸ்வி ஆகியோர் ஆளும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆர் அசோக் தனது எக்ஸ் பக்கத்தில் ‛‛கர்நாடகாவில் அனுமன் சாலிசாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா முதல்வர் சித்தராமையா?. சித்தராமையாவின் வாக்குவங்கி அரசியலால் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் பெங்களூரில் அனுமன் பாடல்கள் இசைக்கப்பட்டதாக கூறி கடைக்காரரை கொடூரமாக தாக்கி உள்ளனர். விதான சவுதாவில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பப்பட்ட பிறகு ராமேஸ்வர் கபேயில் வெடிகுண்டு வெடித்தது. இப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. தேசவிரோதிகளால் பெங்களூரில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது'' என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications