பெங்களூர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை.. ஒற்றுமையை காட்டிய சித்தராமையா! கர்நாடகாவில் களைகட்டிய பொங்கல்
பெங்களூரு: தை பொங்கல் பண்டிகை மற்றும் திருவள்ளுவர் தின விழா உலக தமிழர்களால் நேற்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகாவில் உள்ள தமிழ் மக்களாலும் நேற்று உற்சாகமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் அமைந்து இருக்கும் அல்சூர் ஏரிக் கரையில் திருவள்ளுவரின் சிலை உள்ளது. அந்த இடத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினத்தை கொண்டாடினார்கள்.
இந்த விழாவில் கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சரும், கர்நாடக எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா கலந்துகொண்டார். அவர் அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்கு மாலை போட்டு மரியாதை செலுத்தினார்.

கர்நாடக எம்.எல்.ஏக்கள் கொண்டாட்டம்
இந்த பொங்கல் விழாவில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், ரிஸ்வான் அர்சத், ஹாரிஸ், கே.ஜே.ஜார்ஜ், அகண்ட ஸ்ரீனிவாச மூர்த்தி உள்ளிட்டோர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் பெங்களூருவில் வசித்து வரும் ஏராளமான தமிழர்களும் கலந்துகொண்டு பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

பெங்களூரு வாழ் தமிழ் மக்கள்
இந்த விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான பொம்மலாட்டம், பொய்க்கால் குதிரை, ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கர்நாடகா - தமிழ்நாடு இடையே காவிரி விவகாரம் தொடர்பாக தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் பெங்களூருவில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செய்து பொங்கல் விழா கொண்டாடியது ஒற்றுமையை காட்டி உள்ளது.

2009ல் திறக்கப்பட்ட சிலை
பெங்களூரில் உள்ள அல்சூர் ஏரிக்கரையில் கடந்த 2009 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி திருவள்ளுவரின் சிலை அமைக்கப்பட்டது. ஏராளமான எதிர்ப்புகளை மீறி, அப்போது கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்த எடியூரப்பா மூலம் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சவர் கருணாநிதி கலந்து கொண்டார்.

1991 இல் அமைக்கப்பட்ட சிலை
கடந்த 1991 ஆம் ஆண்டு கர்நாடக முதலமைச்சராக பங்காரப்பா இருந்தபோது, பெங்களூரில் உள்ள தமிழ்ச் சங்கம் அப்போது தமிழ்ப்புலவர் திருவள்ளுவருக்கு அல்சூர் ஏரிக்கரையில் சிலை வைக்க திட்டமிட்டது. இதற்கான அனுமதி பெறப்பட்டு சிலையும் நிறுவப்பட்ட நிலையில், கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்களின் எதிர்ப்பை தொடர்ந்து பங்காரப்பாவுக்கு மனமாற்றம் ஏற்பட்டதால் சிலை திறக்கப்பவில்லை.

வாழ்த்திய கருணாநிதி
அதன் பின்னர் 18 ஆண்டுகள் கழித்து கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது இந்த சிலை திறக்கப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற கருணாநிதி எடியூரப்பாவை மனதார பாராட்டினார். "இந்த சிலையை நிறுவியது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. 18 ஆண்டுகளாக எனக்கு இருந்த மனக்கசப்பை நீங்கள் நீக்கி உள்ளீர்கள்." என்று எடியூரப்பாவை கருணாநிதி வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications