சென்னை டூ பெங்களூர்.. தமிழக அரசு பஸ்கள் ஓடவில்லை.. 2வது நாளாக பயணிகள் அவதி
பெங்களூர்: கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதால் தமிழகத்திலிருந்து தனியார் பேருந்துகள் மட்டுமே அங்கு செல்கின்றன.
Recommended Video
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தமிழக கர்நாடக எல்லையில் உள்ள கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கர்நாடக மாநில அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் சாம்ராஜ்நகர் மாவட்டம் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சாம்ராஜ்நகர்
இந்நிலையில் சாம்ராஜ்நகர் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான கொள்ளேகால், குண்டல்பேட்டை, ஹனூர், மாதேஸ்வரன் மலை, நஞ்சன்கூடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டது.
தனி பேருந்து நிலையங்கள்
கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை நகரப்பகுதிகளில் அரசு பேருந்துகளுக்கு என தனி பேருந்து நிலையமும், தனியார் பேருந்துகளுக்கு தனியாக பேருந்து நிலையம் செயல்படுவது வழக்கம். தனியார் பேருந்துகள் அரசு பேருந்து நிலையத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. இந்நிலையில் தற்போது அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சாம்ராஜ்நகர் அரசு பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் அனுமதிக்கப்பட்டு தற்போது பயணிகள் தனியார் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் அவதி
இருப்பினும் கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை-பெங்களூர் பஸ்
இதனிடையே சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் தமிழக அரசு பஸ்கள் 2வது நாளாக இன்று இயக்கப்படவில்லை. கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபடுவதால் தமிழக அரசு பஸ்கள் பெங்களூர் செல்லவில்லை.