'பிரேக்கிங் பேட்' பாணி.. ஆசிரியரிடம் ரூ.99 கோடி ஹெராயின்.. அதிர்ந்து போன பெங்களூர் ஏர்போர்ட்
பெங்களூர்: 'பிரேக்கிங் பேட்' (Breaking Bad) சீரியல் பாணியில் போதைப்பொருள் கடத்தல்காரராக மாறிய ஆசிரியரிடம் இருந்து ரூ.99 கோடி மதிப்பிலான ஹெராயின் பெங்களூர் விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எத்தியோப்பியாவில் இருந்து பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானத்தில் அதிக விலைமதிப்பு கொண்ட போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை வருவாய் உளவுப்பிரிவு இயக்குநரகத்துக்கு (டிஆர்ஐ) போலீஸார் தெரிவித்தனர். இதன்பேரில், பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையத்தில் கடந்த 19-ம் தேதி டிஆர்ஐ அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது நள்ளிரவு 2 மணியளவில் பெங்களூர் விமான நிலையத்தில் 'எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்' விமானம் தரையிறங்கியது. அந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் அனைவரிடமும் டிஆர்ஐ அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது இரண்டு பெரிய ட்ராலி வகை சூட்கேஸ்களுடன் வந்த பயணி ஒருவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவருடைய சூட்கேஸ்களும் 'ஸ்கேன்' செய்யப்பட்டன. ஆனால் அந்த சூட்கேஸ்களில் எந்த போதைப்பொருட்களும் இல்லை. எனினும், அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, அவர் கொண்டு வந்த சூட்கேஸ்களை திறந்து பார்த்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சூட்கேஸின் அடியில் ஃபால்ஸ் பாட்டம் (false bottom) இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். ஃபால்ஸ் பாட்டம் சூட்கேஸில் அடிப்பகுதிக்கு கீழே மற்றொரு சிறிய வகை திறப்பு இருக்கும். சோதித்து பார்த்தால் ஒழிய இதனை கண்டுபிடிக்க முடியாது. பின்னர், அந்தப் பகுதிக்குள் பார்த்த போது அதில் 14 கிலோ எடைக்கொண்ட ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.99 கோடி ஆகும்.ஸ்கேனில் இருந்து தப்புவதற்காக அந்த ஹெராயின் பார்சல் மீது கறுப்பு நிற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இதையடுத்து, அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் தெலங்கானாவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தது தெரியவந்தது. கொரோனா காலக்கட்டத்தில் பணி இழந்த அவர், இண்டெர்நெட்டில் வேலை தேடியுள்ளார். அப்போது "வருமானத்துடன் வெளிநாடுகளுக்கு பறக்க வேண்டுமா?" என்ற விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசியவர், அவரை எத்தியோப்பியாவுக்கு வரவழைத்து அவரிடம் இந்த போதைப்பொருளை கொடுத்து டெல்லிக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார். அவ்வாறு சென்று உரியவரிடம் ஒப்படைத்தால் லட்சக்கணக்கில் பணம் தருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
பணத்துக்காக ஆசைப்பட்டு அவர் அந்த போதைப்பொருட்களை பெங்களூருக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. இங்கிருந்து டெல்லிக்கு விமானத்தில் செல்வதற்காக காத்திருந்த போது அவர் டிஆர்ஐ அதிகாரிகளிடம் சிக்கி இருக்கிறார். அவரை கைது செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் அவரை அடைத்தனர்.












Click it and Unblock the Notifications