பஜ்ரங்தள் நிர்வாகி கொலையால் தணியாத பதற்றம்..பற்றி எரியும் போராட்டம் மேலும் 2 நாட்களுக்கு தடை உத்தரவு
பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் பஜ்ரங்தள் இளம் நிர்வாகி கொலை செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து அங்கு பதட்டம் நீடிப்பதால் ஷிமோகா மாவட்டத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் ஷிமோகா நகரில் பஜ்ரங்தள் எனப்படும் இந்துத்துவா அமைப்பின் நிர்வாகியான 23 வயதான ஹர்ஷா மர்ம நபர்களால் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதன் காரணமாக ஷிமோகாவில் வன்முறை வெடித்து நிலையில் பல வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட தோடு கடைகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
கொடூர கொலை
ஹர்ஷாவின் கொலையையடுத்து அங்கு வன்முறை ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷிமோகா நகரப் பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டது. மாவட்டம் முழுவதும் 2 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ஹர்ஷாவின் கொலைக்கு நீதிகேட்டு ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன.
பஜ்ரங்தள் நிர்வாகி
ஹர்ஷாவின் கொலைக்கு நீதி கேட்பதாக கூறி பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. கடைகள் வீடுகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதோடு வாகனங்களுக்கு தீ வைப்பு போன்ற வன்முறைகளும் நடைபெற்றது. மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு கலவரம் பரவாமல் தடுக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பஜ்ரங்தள் நிர்வாகி ஹர்ஷா கொலை வழக்கு குறித்து பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் , பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை எனக் கூறினார்.
நீடிக்கும் பதற்றம்
இருந்தும் கர்நாடகாவில் தற்போது வரை பதற்றம் நீடித்து வரும் நிலையில் ஹர்ஷா கொலை வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 21 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக ஷிமோகா நகர காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார். இருந்தபோதும் பதட்டம் அங்கு தணியாமல் நீடித்து வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக கல்வீச்சுகளும் போராட்டங்களும் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
தடை நீட்டிப்பு
இந்நிலையில் பதற்றத்தை தணிக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஷிமோகா மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மேலும் இரண்டு நாட்களுக்கு மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மட்டுமே மக்கள் நடமாட அனுமதிக்க படுவார்கள் எனவும் இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை காலை வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.