என்னை வன்புணர்வு செய்தது போல கேள்வி கேட்கிறார்கள்.. கர்நாடகாவில் சபாநாயகர் சர்ச்சை பேச்சு!
கர்நாடக சட்டசபையில் சபாநாயகர் ரமேஷ் குமார், தன்னை ஒரு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணுடன் ஒப்பிட்டு பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் சபாநாயகர் ரமேஷ் குமார், தன்னை ஒரு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணுடன் ஒப்பிட்டு பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக சட்டசபையில் தற்போது ''ரிசார்ட் அரசியல்'' போய் ''டேப் அரசியல்'' வந்துவிட்டது. கடந்த சில நாட்களாக, கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் பாஜகவை சேர்ந்த எடியூரப்பாவின் போன் உரையாடல்கள் என்று சொல்லப்படும் ஆடியோதான் பெரிய வைரலாகி இருக்கிறது.
கர்நாடக சட்டசபை எப்போது கலையும், ஆட்சி எப்போதும் கவிழும் என்று பாஜக திட்டமிட்டு வருகிறது. காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சியை முறியடிக்க பாஜக முயன்றும் கூட தோல்வியை தழுவியது.
டேப் வெளியிட்டார்
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆடியோ டேப் ஒன்றை வெளியிட்டார். அதில், எடியூரப்பா, மஜத எம்எல்ஏ ஒருவரின் மகனிடம் பேசுவது போல பதிவாகி இருந்தது. பணம் கொடுக்கிறோம், கட்சி மாறிவிடுங்கள் என்று அந்த ஆடியோவில் பேசுவதாக பதிவாகி இருந்தது. இதை குறித்து விசாரிக்க தற்போது சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
என்ன குற்றம்
இதில் கர்நாடக சட்டசபை சபாநாயகர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் குமார் பெயரும் அடிபட்டது குறிப்பிடத்தக்கது. அந்த ஆடியோவில் எடியூரப்பா '' ரமேஷ் குமார் எங்கள் பக்கம்தான் இருக்கிறார். அவருக்கு 50 கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறோம்'' என்று கூறியது பதிவாகி இருந்தது. ஆனால் எடியூரப்பா இந்த குற்றச்சாட்டை மறுத்தார்.
மோசமான கருத்து
இதுகுறித்து கருத்து தெரிவித்துதான் தற்போது கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ் குமார் சர்ச்சையில் சிக்கி உள்ளார். தன்னை எல்லோரும் இது தொடர்பாக கேள்வி கேட்பதால், தன்னை பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஒப்பிட்டு அவர் பேசினார். இந்த பிரச்னையை அவர் பாலியல் வன்புணர்வுடன் ஒப்பிட்டு பேசியதுதான் பிரச்சனைக்கு காரணம் ஆகும்.
என்ன பேசினார்
அவர் சட்டசபையில் பேசியதாவது.
ரமேஷ் குமார்: இங்கு ஒரு வன்புணர்வு நடந்து விட்டது, இதற்கான வழக்கு பதியப்பட்டுள்ளது . இதன் மீது போலீசும் நடவடிக்கை எடுத்து, குற்றவாளியை சிறைக்கு அனுப்பிவிட்டது. ஆனால் இப்போது குற்றவாளி தரப்பு வக்கீல், வன்புணர்வு செய்யப்பட்ட என்ன மீண்டும் மீண்டும் கேள்வி கேட்கிறார். எதோ நான்தான் வன்புணர்வு செய்ய கூறியது போல.
அவையில் பல எம்எல்ஏக்கள் சிரிக்க தொடங்கினார்கள்.
ரமேஷ் குமார்: இருங்கள்.. இருங்கள், உங்களை எங்கே ரேப் செய்தார்கள், எங்கே தொட்டார்கள் என்று எதிர்க்கட்சியினர் கேட்கிறார்கள். என்னை 100 முறை வன்புணர்வு செய்தது போல கேள்வி கேட்கிறார்கள், என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
பாஜக எம்எல்ஏ கேஎஸ் ஈஸ்வரப்பா: நீங்கள் இதை மீண்டும் மீண்டும் பேசும் போதே தெரிகிறது.உங்களை எல்லோரும் எத்தனை முறை வன்புணர்வு செய்து இருக்கிறார்கள் என்று, என கூறினார்.
மீண்டும் அவையில் எம்எல்ஏக்கள் சிரிக்க தொடங்கினார்கள்.
பெரிய சர்ச்சை
சட்டசபையில் சபாநாயகர் ஒருவர் இப்படி பேசியதும், அதற்கு பலர் இப்படி சிரித்தும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தன்னை எல்லோரும் கேள்வி கேட்பதை கிண்டலாக குறிப்பிட சபாநாயகர், ''வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறேன்'' என்ற பதத்தை பயன்படுத்தியது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.