லிப்லாக் சேலஞ்ச்! கர்நாடகத்தில் மாணவிகளை தொல்லை செய்த மாணவர்கள்.. பின்னணியில் ‛ட்ரூத் ஆர் டேர்’!
பெங்களூர்: கர்நாடகத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் லிப்லாக் சேலஞ்ச் நடத்தியதாக கூறிய விவகாரத்தில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் பின்னணியில் ‛ட்ரூத் ஆர் டேர்' கேம் இருப்பதும், முத்த வீடியோவை காட்டி மாணவிகளுக்கு மாணவர்கள் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் முத்தமிட்டு கொள்ளும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வேகமாக பரவியது.
இதுபற்றி விசாரணையில் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வைத்து முத்தப்போட்டி நடத்தியது தெரியவந்தது. இது பெரும் சர்ச்சையானது.

கைது எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு
இதுதொடர்பாக போலீசார் இந்திய தண்டனை சட்டம் 376 (பலாத்காரம்), 354 (பெண்ணை தாக்குதல்), 354 சி (பாலியல் துன்புறுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளில் மங்களூரு வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போக்சோவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 8 பேர் கைதாகி உள்ளனர். மாணவிகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பின்னணி என்ன?
இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரம் குறித்த மங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் கூறியதாவது: இந்த சம்பவம் பிப்ரவரியில் நடந்துள்ளது. கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபோது ‛ட்ரூத் ஆர் டேர்' விளையாடினர். இந்த விளையாட்டின்போது விடுக்கப்பட்ட சவாலின் அடிப்படையில் முத்தமிட்டுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

வாட்ஸ்அப் குழுவில் வீடியோ
இந்நிலையில் தான் முத்தமிட்ட மாணவி மீது மாணவர் ஒருவருக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முத்த வீடியோவை கல்லூரியின் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டுள்ளார். குழுவில் அட்மினாக இருக்கும் போராசிரியரின் கவனத்துக்கு இது சென்றது. இதுபற்றி விசாரித்த கல்லூரி நிர்வாகம் சிலரை சஸ்பெண்ட் செய்தது. இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் எதுவும் செய்யப்படவில்லை. முறைப்படி இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு புகார் அளித்து இருக்க வேண்டும். இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

தொடர்ந்து பாலியல் தொல்லை
இந்த சம்பவத்தில் 8 மாணவர்கள், 2 மாணவிகளை முத்தமிட்டு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். மேலும் வீடியோ பதிவை காண்பித்தும் மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். கைதான 8 பேர் மீது போக்சோ உள்ளிட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications