கர்நாடகா: எடியூரப்பா மனைவி, சித்தராமையா மகன் 'மரணங்கள்'- மத்திய அமைச்சர் ஷோபா- மாநில அமைச்சர் மோதல்!
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் சித்தராமையா மகன் ராகேஷ், கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மனைவி ஆகியோரது மரணங்களை முன்வைத்து மத்திய அமைச்சர் ஷோபா மற்றும் கர்நாடகா அமைச்சர் பைரதி சுரேஷ் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. எடியூரப்பா மனைவியின் மர்ம மரணத்துக்கு மத்திய அமைச்சர் ஷோபாதான் காரணம் என்கிறார் மாநில அமைச்சர் பைரதி சுரேஷ்; ஆனால் சித்தராமையா மகன் ராகேஷ் மரணத்துக்கு காரணமே பைரதி சுரேஷ்தான் என்கிறார் மத்திய அமைச்சர் ஷோபா.
கர்நாடகா மாநில அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முடா எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், முதல்வர் சித்தராமையா மனைவிக்கு வீட்டு மனைகள் ஒதுக்கிய விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முடா வழக்கின் ஆவணங்களை மாநில அமைச்சர் பைரதி சுரேஷ் எரித்துவிட்டதாக மத்திய அமைச்சர் ஷோபா குற்றம்சாட்டி இருந்தார்.

இதற்கு பதிலளித்த மாநில அமைச்சர் பைரதி சுரேஷ், முன்னாள் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான எடியூரப்பாவின் மனைவி மர்மமாக மரணம் அடைந்ததற்கு காரணமே மத்திய அமைச்சர் ஷோபாதான் என பகீர் குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தம் மீதான அமைச்சர் பைரதி சுரேஷின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் ஷோபா பதிலளித்துள்ளார். அதில், மாநில முதல்வர் சித்தராமையாவின் மகன் ராகேஷ் மரணத்துக்கு காரணமே மாநில அமைச்சர் பைரதி சுரேஷ்தான். முடா நில முறைகேடு விவகாரத்தில் சித்தராமையாவை சிக்க வைத்ததும் பைரதி சுரேஷ்தான். சித்தராமையா சொத்துகளை பைரதி சுரேஷ் அபகரிக்க முயற்சித்தார்; இதற்கு தடையாக இருந்ததால் சித்தராமையா மகன் ராகேஷை அமைச்சர் பைரதி சுரேஷ் கொலை செய்ததாக மக்கள் பேசுகின்றனர். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். மத்திய மாநில அமைச்சர்களின் பரஸ்பர குற்றச்சாட்டுகளால் கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications