“கலவரம்”.. ஆர்எஸ்எஸ், பாஜகவின் கொள்கையே அதான்! தேச துரோகம் செய்றாங்க - விளாசிய ராகுல் காந்தி
பெங்களூரு: பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் கொள்கையே நாட்டில் மதக் கலவரத்தை உருவாக்குவதுதான் என்றும் அவர்கள் செய்வது தேச பக்தி இல்லை தேசிய துரோகம் எனவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்து இருக்கிறார்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த 7 ஆம் தேதி தொடங்கினார் ராகுல் காந்தி.
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்தித்து வருகிறார்.
பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டியா?.. மோடி பதில் சொல்லியே ஆக வேண்டும்.. புள்ளி விவரங்களுடன் ராகுல் அட்டாக்!
கர்நாடகாவில் யாத்திரை
கன்னியாகுமரியில் தொடங்கி, கேரளாவின் பல மாவட்டங்கள் வழியாக 18 நாட்கள் நடந்து வந்த ராகுல் காந்தி, மீண்டும் கடந்த 29 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்தார். அங்கிருந்து கர்நாடக மாநில எல்லைக்குள் நுழைந்த ராகுல் காந்தி, அக்டோபர் 1 முதல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
கவனம் ஈர்க்கும் ராகுல்
கர்நாடகாவில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் பல்வேறு பகுதிகளுக்கு நடந்து சென்று மக்களை சந்தித்தும் கூட்டங்களில் பேசியும் வருகிறார். இன்று பெல்லாரி மாவட்டம் சென்ற ராகுல் காந்தி அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இதில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கேஸ் விலை
2 லட்சம் பேர் பங்கேற்ற இக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, கடந்த 2004 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் சகோதரிகள் தாய்மார்கள் பாதிக்கப்பட்டதாக பேசியதை சுட்டிக்காட்டினார். "இன்று கேஸ் விலை ரூ.400-ல் இருந்து ரூ.1,050 ஆக அதிகரித்து இருக்கிறது. இப்போது யார் பாதிக்கப்படுகிறார்கள் என்று அவர் கேட்பாரா?
பாஜக, ஆர்.எஸ்.எஸ்.
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் கொள்கையே நாட்டில் மதக் கலவரத்தை உருவாக்குவதுதான். அவர்கள் செய்வது தேச பக்தி இல்லை. தேசிய துரோகம். பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்கள் 50% அதிகரித்துவிட்டன. சாமானிய மக்கள் வேலை வாய்ப்பு மற்றும் விலை உயர்வால் நசுக்கப்படுகின்றன." என்றார்.