தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது.. அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிறகு அடித்துச் சொன்ன சித்தராமையா!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் வரலாறு காணாத மழைநீர் பற்றாக்குறையை சந்தித்து வரும் நிலையில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 86ஆவது கூட்டம், அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, இன்று முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கபட்டினம் அருகே காவிரி ஆற்று நீரில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுவதில்லை என கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளதாக தெரிவித்தார். 150 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காவிரி நீர்பிடிப்பு மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று கர்நாடக மாநிலம் மைசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா, "மேகதாது அணை கட்டப்படும் பகுதி கர்நாடக எல்லையில் தான் உள்ளது. அதை தமிழ்நாடு எதிர்க்க எந்தக் காரணமும் இல்லை. ஆனால், தமிழ்நாடு தேவையில்லாமல் தொல்லை கொடுக்கிறது. மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்த பிறகும் கூட, அதற்கு அனுமதி அளிப்பதற்கு மத்திய அரசு முன்வரவில்லை" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், காவிரி நதிநீர் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க கர்நாடலாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதாகவும் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, "கர்நாடக மாநிலம் கடுமையான மழை நீர் பற்றாக்குறையைச் சந்தித்து வருகிறது. கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவும் நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த பங்கீட்டு விதிமுறையின் படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடும் சூழலில் கர்நாடகம் இல்லை. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
மேலும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவிடமும் மனு அளிக்கவிருக்கிறோம். பிரதமர் மோடி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரிடமும் முறையிடுவோம். கர்நாடகத்தின் தண்ணீர் தேவையைப் போக்கவே 70 டிஎம்சி நீர் தேவைப்படுகிறது. எங்களிடம் 53 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழல் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications