இது ஒரு ஊரா? இனி வரி கிடையாது.. பெங்களூர் மக்கள் திடீர் போர்க்கொடி.. பிரஷரில் கர்நாடகா அரசு
பெங்களூர்: பெங்களூர் நகரில் உள்கட்டமைப்பு வசதிகள் சரிசெய்யப்படவில்லை. இதில் கவனம் வைத்து அரசு செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் வரி செலுத்த மாட்டோம் என்று வரி செலுத்தும் பொதுமக்கள் சார்பில் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது கர்நாடகா அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ள நிலையில் துணை முதல்வர் டிகே சிவக்குமார் விளக்கமளித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா செயல்பட்டு வருகிறார். துணை முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். டிகே சிவக்குமார் பெங்களூர் வளர்ச்சி துறை அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார். பெங்களூரை எடுத்து கொண்டால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைகளில் பள்ளங்கள் உள்ளன.

இதனை சரிசெய்ய வேண்டும் என்று தொடர்ந்து மக்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் உயரதிகாரிகள் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை பள்ளங்களை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிய சாலைகள், சாலை பள்ளங்களை சரிசெய்ய ரூ.1,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருப்பினும் கூட சாலை பள்ளங்கள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றால் அரசு விமர்சனங்களை எதிர்த்து வருகிறது. குறிப்பாக பெங்களூரில் செயல்பட்டு வரும் பயோகான் நிறுவனத்தின் கிரண் மஜும்தார் ஷா தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். சமீபத்தில் அவர், ‛‛ பயோகான் பார்க்குக்கு வந்த வெளிநாட்டு வர்த்தகர், 'ஏன் சாலைகள் இவ்வளவு மோசமாக உள்ளன? ஏன் இவ்வளவு குப்பைகள் உள்ளன? அரசாங்கம் முதலீட்டை ஆதரிக்க விரும்பவில்லையா? நான் சீனாவிலிருந்து வந்திருக்கிறேன். வணிகத்திற்கான வாய்ப்புக்கள் சாதகமாக இருக்கும்போது இந்தியா ஏன் தனது செயல்களை ஒருங்கிணைக்க முடியவில்லை என்று எனக்குப் புரியவில்லை?' என்று கேட்டார்.
நமது நகரத்தை சரி செய்து உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கான அரசியல் அவசரத்தை அரசியல் தலைமை ஏன் காட்டவில்லை? என்பது எனக்கு குழப்பமாக இருக்கிறது. இதற்கு பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் செயல்படுத்துதல் அடிப்படையில் கவனம் செலுத்துவதை தவிர வேறு எதுவும் தேவையில்லை. பெங்களூர் சாலை மேம்பாட்டுக்காக ரூ.83 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்'' என்று அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
இதுதொடர்பாக கர்நாடகாவின்ட வரி செலுத்துவோர் மன்றம் (Individual Tax Payers Forum) சார்பில் முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், ‛‛பெங்களூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மோசமான உள்கட்டமைப்பால் பொதுமக்கள் மற்றும் வரி செத்துவோர் தங்களின் குடும்பம், குழந்தைகளுடன் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வர்தூர்-பால்கெரே பாணத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் அரைக்கறையான பணி, மழைநீர் வடிகால் பணிகள் பற்றி உங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
சாலைகளில் வடிகால் வசதி செய்து தர வேண்டும். அரைகுறையாக போடப்படும் சாலைகள் மழை வெள்ளத்தில் விரைவில் சேதமடைகின்றன. இதனால் அரசு நிதியாக இருக்கும் மக்களின் வரிப்பணம் வீணடிக்க்பபடுகிறது. பெங்களூரு இந்தியாவின் ஐடி மையமாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய அலட்சியம் பெங்களூரின் பெருமையை சீர்க்குலைக்கும் வகையில் உள்ளது. இதனை ஏற்க முடியாது. இத்தகைய நிலை தொடரும் பட்சத்தில் வரி செலுத்தமாட்டோம்'' என்று கூறப்பட்டு இருந்தது.
இதற்கு, கர்நாடகா துணை முதல்வரும், பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சருமான டிகே சிவக்குமார் பதிலளித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,‛‛ பெங்களூர் சிட்டியில் வாகனங்கள் சுமூகமாக சென்று வருவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. நகரில் பல்வேறு இடங்களில் உள்ள பள்ளங்களை சரிசெய்வதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications