ராகுல் பங்கேற்ற விழாவில் திரண்ட கூட்டத்தால் மிரண்டுபோன பாஜக.. சாதித்துக் காட்டிய சித்தராமையா!
பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக கர்நாடகா வந்தார். ராகுல் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவின் பிறந்தநாள் விழாவிற்குக் கூடிய கூட்டம் பாஜகவையும் மிரளச் செய்துள்ளது.
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் காங்கிரஸ் கட்சி வென்றால் யார் முதல்வர் ஆவது எனும் போட்டி இப்போதே கர்நாடகாவில் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ராகுல் காந்தி முன்னிலையில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் பெரும் கூட்டத்தைத் திரட்டிக் காட்டியுள்ளார் முன்னாள் முதல்வர் சித்தராமையா.
இந்தக் கூட்டம் பாஜக நிர்வாகிகளுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பல கி.மீ தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட இந்தக் கூட்டம் பாஜக தலைமைக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளதாம்.
பாஜகவினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.. ஆனால் எங்களுக்கு பயமில்லை.. ராகுல் காந்தி!
கர்நாடக அரசியல்
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. 2018 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஜே.டி.எஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது காங்கிரஸ். ஜே.டி.எஸ் தலைவர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவான காங்கிரஸ், ஜேடிஎஸ்ஸின் பல எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் தாவியதால் ஒரு வருடத்தில் ஆட்சி கவிழ்ந்தது. அதன் பிறகு பாஜக மீண்டும் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தது. பாஜக சார்பில் எடியூரப்பா முதல்வரானார். கடந்த ஆண்டு பசவராஜ் பொம்மை பாஜக சார்பில் முதல்வரானார்.
சட்டமன்றத் தேர்தல்
அடுத்த ஆண்டு கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கி உள்ளன. கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸ் சார்பில் வார் ரூம் இன்சார்ஜ் ஆக தமிழகத்தை சேர்ந்த சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக ஆலோசகராக சுனில் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
களப்பணியில் தீவிரம்
தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே உள்ளதால் இப்போதே களப்பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டது காங்கிரஸ் கட்சி. அதேநேரம், காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதலமைச்சர் பதவி யாருக்கு என்பதில் சித்தராமையா - டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்துள்ளது. இதனால், கட்சியில் தங்கள் பலத்தை நிரூபிக்க இரு தரப்பினரும் முயன்று வருகின்றனர்.
திரண்ட கூட்டம்
சித்தராமையாவின் 75-வது பிறந்த நாள் விழா தாவணகெரேயில் நேற்று நடந்தது. மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்ற இந்த விழாவில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் ராகுல் காந்தியும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த விழா மூலம் சித்தராமையா தனது செல்வாக்கை வெளிப்படுத்தியுள்ளார். ராகுல் காந்தி பங்கேற்ற இந்த விழாவில் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டுள்ளது பாஜகவுக்கும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் போக்குவரத்து நெரிசல்
தாவணகெரெயில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தால் பெங்களூர்- புனே நெடுஞ்சாலையில் சுமார் 6 கி.மீ தொலைவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்டம் மூலம் காங்கிரஸில் தனது பலத்தை நிரூபிக்க சித்தராமையா முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேநேரம், இந்தக் கூட்டத்தால் ஆளும் பாஜகவின் தலைவர்களும் அதிர்ந்து போயுள்ளனராம்.
ராகுல் காந்தி
இதற்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக கர்நாடகா வந்தார். சித்ரதுர்கா சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள லிங்காயத்து முருக ராஜேந்திரா மடத்துக்கு சென்ற ராகுல் காந்தி மடத்தின் தலைமை மடாதிபதி ஷிவமூர்த்தி முருகு சரணரு, ஹாவேரி ஹொசமட சுவாமி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். பின்னர் ஹாவேரி ஹொசமட சுவாமி பேசுகையில், "இங்கு வந்த பிறகே இந்திரா காந்தி பிரதமர் ஆனார். அதேபோல ராஜீவ் காந்தியும் பிரதமர் ஆனார். தற்போது ராகுல் காந்தி இங்கு வந்துள்ளதால் ஒரு நாள் நிச்சயம் பிரதமர் ஆவார்" என்றார்.
கட்சி நிர்வாகிகள் கூட்டம்
இந்நிலையில் நேற்று தார்வாடில் ராகுல் காந்தி தலைமையில் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ராகுல் காந்தி , கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 150 தொகுதிகளை கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வேண்டும். காங்கிரஸ் மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சிப் பணி மேற்கொள்ள வேண்டும். பாஜக அரசின் ஊழல், சட்ட விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்த வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.