என் காரு ரூ.1.50 கோடி.. பஸ்சில் விழுந்து சாவேன்.. பைக்கில் வந்தவரிடம் சீறிய மாஜி பிரதமரின் மருமகள்
பெங்களூர்: ‛‛நீ சாக வேண்டும் என்றால் பஸ்சுக்குள் அடியில் விழுந்து சாகலாமே. ஏன் என்னுடைய ஒன்றரை கோடி கார் மீது மோதின'' என பைக்கில் சென்றவரிடம் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மருமகள் பவானி ரேவண்ணா சண்டையிட்ட வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவேகவுடா. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த இவர் ஜேடிஎஸ் எனும் கட்சியை நடத்தி வருவதோடு, தற்போது ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார். இவருக்கு 2 மகன்கள்.

மூத்தவர் பெயர் ரேவண்ணா. முன்னாள் அமைச்சரான இவர் தற்போது ஹாசன் மாவட்டம் ஹொலேநரசிப்புரா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இளைய மகன் பெயர் குமாரசாமி. கர்நாடகா முன்னாள் முதல்வரான இவர் தற்போது ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டனா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அதோடு ஜேடிஎஸ் கட்சியின் மாநில தலைவராக செயல்பட்டு வருகிறார்.
இதில் ரேவண்ணா குடும்பத்தை எடுத்து கொண்டால் அவரது மனைவி பெயர் பவானி ரேவண்ணா. இந்த தம்பதியின் மகன் பிரஜ்வெல் ரேவண்ணா ஹாசன் தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். இன்னொரு மகன் சூரஜ் ரேவண்ணா கர்நாடகா மேல்சபை உறுப்பினராக(எம்எல்சி) இருக்கிறார்.
இந்நிலையில் தான் ரேவண்ணாவின் மனைவி பவானி ரேவண்ணா காரில் தனது சொந்த ஊரான உடுப்பி மாவட்டம் சாலிகிராமத்துக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பவானி ரேவண்ணா சென்ற காரும், பைக்கும் மோதிக்கொண்டது. இதில் அவரது கார் சேதமடைந்தது. இதனால் பவானி ரேவண்ணா கடும் கோபம் அடைந்தார்.
இதையடுத்து அவர் தனது காரில் இருந்து இறங்கி பைக்கில் வந்தவரை பார்த்து,‛‛நீ சாக வேண்டும் என்றால் பஸ்சில் விழுந்து சாக வேண்டியது தானே. தவறான பக்கத்தில் வந்து எனது காரில் என் வந்து மோதினாய். இந்த காரின் மதிப்பு என்ன தெரியுமா? இது ரூ.1.50 கோடி. இந்த காரை வாங்கியதில் இருந்து சிறு கீறல் கூடபவில்லை. இதனை சரிசெய்ய ரூ.50 லட்சம் செலவாகும். இதனை தருவீர்களா?'' எனக்கூறி அவரை திட்டினார். மேலும் காரின் மதிப்பு ரூ.1.50 கோடி என அடிக்கடி கூறினார்.
இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் பவானி ரேவண்ணாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பைக் ஓட்டி வந்தவர் சாலையில் தவறான பக்கத்தில் வந்தது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் எனக்கூறி பவானி ரேவண்ணாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேவேளையில் சிலர் தவறான பக்கத்தில் வந்தாலும் கூட யாரும் வேண்டும் என்றே விபத்தை ஏற்படுத்த மாட்டார்கள். தெரியாமல் விபத்து நடந்துள்ளது. இதற்காக இப்படி திட்டக்கூடாது எனக்கூறி பவானி ரேவண்ணாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications