"உருது.." கொலை வழக்கில் நைஸாக மதத்தை இழுத்த கர்நாடக அமைச்சர்.. வசமாக சிக்கியதால் பல்டி
பெங்களூர்: பெங்களூரில் 22 வயது வாலிபர் கொலை செய்யப்பட்டார். அவருக்கு உருது மொழி தெரியாததால் தான் கொலை நடந்ததாக தவறான தகவல் கூறி கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கர்நாடகத்தில் மதம் சார்ந்த விஷயங்கள் தொடர்பாக தற்போது சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. ஹிஜாப் தடை, கோவில்களில் கடை அமைக்க முஸ்லிகளுக்கு தடை, ஹலால் உணவு பிரச்சனை, மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த எதிர்ப்பு என அடுத்தடுத்து பிரச்சனைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தான் உருதுமொழி தெரியாததால் வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தவறான தகவல் அளித்து அரக ஞானேந்திரா சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதன் விபரம் வருமாறு:

கத்தியால் குத்திக்கொலை
பெங்களூர் காட்டன்பேட்டை அருகே ஜெய்மாருதி நகரில் வசித்தவர் சந்துரு (வயது 22). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் தனது நண்பர் சைமனுடன் சிக்கன் ரோல் சாப்பிட ஜேஜே நகருக்கு பைக்கில் சென்றார். இந்த வேளையில் அவர்களுக்கும், இன்னொரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சந்துரு கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

மூவர் கைது
இதுகுறித்து ஜேஜே நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ஷாகித் என்பவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் உருது மொழி பேசாததால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் பரவின. இதை கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவும் உறுதி செய்தார்.

உருது தெரியாததால் கொலை
இதுதொடர்பாக அமைச்சர் அரக ஞானேந்திரா இன்று கூறுகையில், ‛‛சிக்கன் சாப்பிட சென்ற சந்துருவை உருது மொழி பேச கூறியுள்ளனர். ஆனால் அவருக்கு கன்னடம் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. இதனால் அவர் உருது மொழி பேசவில்லை. இதையடுத்து ஏற்பட்ட தகராறில் கொலை நடந்துள்ளது. இதில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். இதேபோல் கர்நாடக பாஜக மூத்த தலைவரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான சிடி ரவியும், அரக ஞானேந்திரா கூறிய கருத்தையே கூறியிருந்தார். இதனால் சந்துருவின் கொலை அரசியல், மதம் அடிப்படை என்ற வகையில் பேசும் பொருளாக மாறியது.

போலீஸ் சொல்வது என்ன
இந்நிலையில் சந்துரு கொலை தொடர்பாக இன்று பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த், துணை போலீஸ் கமிஷனர் அனுஜித் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‛‛சிக்கன் சாப்பிட சென்றபோது சந்துரு ஓட்டிய பைக் கட்டுப்பாட்டை இழந்து ஷாகீத் என்பவரின் பைக்கில் மோதியது. இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறியது. ஷாகீத் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சந்துருவை குத்திவிட்டு ஓடினார். சந்துரு மீட்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்'' என்றனர்.

தவறை ஒப்புக்கொண்ட அமைச்சர்
உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறியதும், போலீஸ் அதிகாரிகள் கூறியதும் வெவ்வேறு விதமாக இருந்தன. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சம்பவம் குறித்து மீண்டும் அமைச்சர் அரக ஞானேந்திராவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அப்போது அவர் தனது தவறை ஒப்புக்கொண்டார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛மோட்டார் சைக்கிள்கள் மோதியது தொடர்பான பிரச்சனையில் கொலை நடந்துள்ளது. எனக்கு முதலில் வந்த தகவலின் அடிப்படையில் முன்பு அவ்வாறு கூறிவிட்டேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications