தங்கத்தின் விலை திடீர் வீழ்ச்சி…. ஏன்னு தெரியுமா?
சென்னை: தங்கம் விலை, கடந்த சிலநாட்களாகவே கடுமையாக வீழ்ச்சி கண்டு வருகிறது. திடீர் சரிவும், சற்றே விலை உயர்வுமாக ஒருவித ஊசலாட்டத்துடன் இருக்கிறது தங்கத்தின் விலை.
சென்னையில் கடந்த 23ம் தேதியன்று சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து 21,176 ஆக விற்பனையானது. இதனால் நகை வாங்க நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.
10 கிராம் சுத்தத்தங்கத்தின் விலை, 800 ரூபாய் வரை குறைந்து, 28,310 ஆக விற்பனையானது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி அதாவது 9 மாதங்களுக்கு முந்தைய நிலையாகும்.
அதேபோல திங்கட்கிழமையன்று அதாவது 26ம் தேதி 22 கேரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.200 குறைந்து ரூ.20,960க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.25 குறைந்து ரூ.2,620க்கு விற்பனையானது.
சற்றே உயர்ந்த தங்கம்
தங்கம் விலை இன்று(மே 27ம் தேதி) சவரனுக்கு ரூ.16 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,648-க்கும், சரவனுக்கு ரூ.16 அதிகரித்து ரூ.21,184-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.20 அதிகரித்து ரூ.28,320-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை உயர்வு
வெள்ளியின் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 10 காசுகள் குறைந்து ரூ.43.90-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.150 குறைந்து ரூ.41,000-க்கும் விற்பனையாகிறது.
டெல்லியில் சரிந்த தங்கம்
அதே சமயம் டெல்லியில் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக மேலும் சரிவடைந்துள்ளது. இன்றைய தினம் சவரனுக்கு ரூ.170 குறைந்துள்ளது. சவரன் 28,100ருபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் ரூ 50 குறைந்து கிலோ 41,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ரிசர்வ் வங்கி நடவடிக்கை
கடந்த ஜூலை மாதம் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு, ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தின் மீதான இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் இறக்குமதி வரி 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டன. தங்க நாணயங்கள் விற்பனை செய்ய வங்கிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
ரூபாயின் மதிப்பு உயர்வு
ரிசர்வ் வங்கியின் இந்த கடுமையான நடவடிக்கையால், கடந்த 7 மாதங்களில் ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சி தடுக்கப்பட்டு தற்போது 58.45 காசுகளாக உயர்ந்துள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறையும் கணிசமான அளவில் குறைந்துள்ளது.
கட்டுப்பாடு தளர்வு
இந்நிலையில், லோக்சபா தேர்தல் முடிவுக்கு பிறகு ரிசர்வ் வங்கி கடந்த வாரம் புதன்கிழமை தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை சற்று தளர்த்துவதாக அறிவித்தது.
எஸ்.டி.எச். எனப்படும் ஸ்டார் டிரேடிங் ஹவுசஸ், பி.டி.எச். எனப்படும் பிரீமியர் டிரேடிங் ஹவுசஸ் மற்றும் தங்கம் இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்ட சில வங்கிகள் ஆகியவற்றுக்கு தங்கம் இறக்குமதிக்கான விதிமுறைகளைத் தளர்த்தி, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. தங்க ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
20 சதவிகித ஏற்றுமதி
இதற்கு முன்னதாக இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவீதத்தை கட்டாயமாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
தங்கம் இறக்குமதி செய்யும் ஒரு நிறுவனம், தாம் இறக்குமதி செய்யும் அளவில் (100 சதவிகிதம்) ஐந்தில் ஒரு பங்கை (20 சதவிகிதம்) ஆபரணமாக உரு மாற்றி ஏற்றுமதி செய்ய வேண்டும். மீதமுள்ள 80 சதவிகிதத்தை உள்நாட்டில் விற்பனை செய்து கொள்ளலாம். இதுவே 20:80 திட்டமாகும்.
நிபுணர்கள் வரவேற்பு
20:80 திட்டத்தின்கீழ் தங்கம் இறக்குமதிக்கான விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளதன் மூலம் ஏராளமானோர் மீண்டும் தங்கம் இறக்குமதியில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.
மேலும் விலை குறையும்
ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையை எதிர்பார்த்து கடந்த இருவாரங்களில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் உயர்மதிப்பு, 125 டாலரில் இருந்து 80 டாலராக குறைந்துள்ளது. இது, வரும் நாட்களில் 20 டாலராக குறைய வாய்ப்புள்ளது. இதனால் நேரடியாக தங்கம் இறக்குமதி செய்யும் வியாபாரிகளுக்கு கணிசமான பணம் மிச்சமாகும் என்கின்றனர் நிபுணர்கள். இது நகை வியாபாராத்தில் போட்டியை அதிகரித்து, அதன் விலை குறைய வழிவகுத்துள்ளது. வரும் நாட்களில், 10 கிராம் சுத்தத்தங்கம், 26 ஆயிரம் ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.