ஜி.எஸ்.டி நடைமுறையால் 1 லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும் – வல்லுநர்கள் கணிப்பு
ஜிஎஸ்டியால் நாடு முழுவதும் புதிதாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி முறையானது நடைமுறைப்படுத்தப்படும்போது நாடு முழுவதும் புதிதாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜூலை 1ம் தேதி முதல் ஜி.எஸ்.டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி முறையானது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கான அனைத்து விதமான கட்டமைப்புகளையும் ஏற்பாடுகளைம் மத்திய அரசும் மாநில அரசுகளும் தயார் நிலையில் வைத்துள்ளன.
நாடு முழுவதும் உள்ள உற்பத்தியாளர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களும் ஜி.எஸ்.டி வரி முறையை எதிர்கொள்ளவும் அதற்கு ஏற்ற வகையில் தங்கள் நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை தயார் செய்வதற்கும் கணக்குகளை தாக்கல் செய்வதற்கும் ஏற்ற வகையில் கணினி மென்பொருள்களை மாற்றி அமைத்தும் வுருகின்றனர்.
ஜிஎஸ்டிக்கு மாறும் வணிகர்கள்
மேலும், தற்போது நடைமுறையில் உள்ள வாட் வரி முறையில் இருந்து ஜி.எஸ்.டி வரி முறையானது முற்றிலும் மாறுபட்டது. எனவே ஜி.எஸ்.டி வரி முறையில் கணக்கு தாக்கல் செய்வதற்கு குறிப்பிடத்தக்க அளவில் அனுபவ அறிவும், கல்வித்தகுதியும் வரி விதிப்பு பற்றிய மேலாண்மை அறிவும் தேவைப்படுவதால், இதற்கான வேலை வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும்.
கணக்கு தாக்கல்
ஏனென்றால். ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையில் சாதாரண வர்த்தகர்கள் தங்களுடைய கொள்முதல் மற்றும் விற்பனைக் கணக்குகளை மாதத்திற்கு மூன்று முறையும் வருடத்திற்கு 37 முறையும் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனங்களும் வெவ்வேறு மாநிலங்களில் கிளைகளைக் கொண்டுள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவங்களும் தங்களுடைய கணக்குகளை வருடத்திற்கு 111 முறையும் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி
இதற்காகவே கணக்கியல், புள்ளியியல், வரி விதிப்பு, பகுப்பாய்வு மற்றும் அடக்க விலைக் கணக்கியல் போன்ற துறைகளில் அதிகப்படியான நிபுணத்துவமும், அனுபவமும் கல்வித் தகுதியும் உள்ள நபர்கள் தேவைப்படுதால் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு துறைகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.
வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்
வரலாற்று சிறப்பு மிக்க, இந்தியாவின் பொருளாதாரம் மற்றம் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கை தரத்தில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தப்போகும் ஜி.எஸ்.டி வரி முறையானது வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுவதால், வேலைவாய்ப்புத் துறையின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 10-13 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
வர்த்தகர்கள் லாபம்
ஜி.எஸ்.டி வரி முறையானது நடைமுறைப்படுத்தப்படும்போது, நாட்டின் சரக்கு கொள்முதல், விற்பனை மற்றும் விநியோகம் அதிகரிக்கும் என்றும் இதனால், பணப் புழக்கத்தை கண்காணிக்கவும் முடியும் என்றம் வர்த்தகர்களின் லாபம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்திய பணியாளர் கூட்டமைப்பின் தலைவர் ரிதுபர்ண சக்ரவர்த்தி உறுதியாகக் கூறினார்.
ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள்
முன்னணி மேலாண்மை நிறுவனமான குளோபல் ஹண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் சுனில் கோயல் கூறுகையில், ஜி.எஸ்.டி வரி முறை நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் காலாண்டில் உடனடியாக ஒரு லட்சத்திற்கம் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகக்கூடும் என்று கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி கணக்குகள்
அதன் பின்பு சுமார் 50,000 முதல் 60,000 வேலை வாய்ப்புகள் உருவாகக்கூடும் என்றும், மத்திய தர மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்கள் தங்கள் ஜி.எஸ்.டி வரி தொடர்பான கணக்குகளை தாக்கல் செய்வதற்கு தகுதியான கணக்கு நிறுவனங்களை நாடக்கூடும் என்றார்.