ஜிஎஸ்டி வரி: தங்க பிஸ்கெட்டை விட சாப்பிடும் பிஸ்கெட்க்கு வரி அதிகம்தான்!
தங்கம், வைர, ரத்தினம் நகைகளுக்கு புதிய வரிவிகிதமாக 3 சதவிகித வரியும், சாப்பிடும் பிஸ்கட்களுக்கு 18 சதவீத வரியும் விதிக்கப்படவுள்ளது.
டெல்லி: டெல்லியில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த 15வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், நிலுவையில் உள்ள அனைத்து விதிமுறைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. தங்கம், வைர, ரத்தினம் நகைகளுக்கு புதிய வரிவிகிதமாக 3 சதவீத வரியும், பிஸ்கட்களுக்கு 18 சதவீத வரியும் விதிக்கப்படவுள்ளது. பாக்கெட் உணவுகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படவுள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கடந்த மாதம் 19ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 1,200 பொருட்கள் மற்றும் 500 சேவைகளுக்கு 5,12,18 மற்றும் 28 என நான்கு விதமாக ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. விடுபட்ட பல பொருட்களுக்கும் வரி நிர்ணயம் செய்யப்பட்டது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
தங்கம், ஜவுளி, காலணி உள்ளிட்ட 6 பொருட்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. அவற்றை நிறைவேற்ற ஜிஎஸ்டி 15வது கவுன்சில் கூட்டம் டெல்லி விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலத்தின் நிதி அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
5 முதல் 28 சதவிகிதம் வரை
இதில் ரூ.500க்கு குறைவான காலணிகளுக்கு 5 சதவீத வரியும், அதற்கு மேற்பட்ட காலணிகளுக்கு 18 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது ரூ.500 முதல் ரூ.1000 வரையிலான காலணிகளுக்கு 6 சதவீத வரியும் மற்றும் மாநிலத்தின் வாட் வரியும் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பருத்திக்கு 5% சணலுக்கு வரி விலக்கு
சணல் பொருட்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பருத்தி நூல், பருத்தி ஆடைகளுக்கான வரி 5 சதவீதமாகவும் இருக்கும். ரெடிமேட் ஆடைகளுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாகவும், பீடிக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படும்.
விவசாய கருவிகளுக்கு 5% வரி
விவசாய உற்பத்திக்கு ஆதரவு அளிக்கும் வகையில், விவசாயிகள் பயன்படுத்தும் கருவிகளுக்கான வரி 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விலை குறையும் பொருட்கள்
ஹேர் ஆயில், டூத்பேஸ்ட் சோப்புகள் போன்றவற்றுக்கு தற்போது 22 முதல் 24 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இவற்றுக்கு ஜிஎஸ்டியில் 18 சதவீத வரிவிதிக்கப்படும்போது இவற்றின் விலை குறையும். வீட்டு உபயோகப் பொருட்கள் பட்டியலில் வரும் ஏசி, பிரிட்ஜ் ஆகியவை 28 சதவீத வரி விகித பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இனி இவற்றின் விலை சற்று குறையக்கூடும். ஏனெனில், தற்போது இவற்றுக்கு 30 முதல் 31 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.
தங்க நகை விலை உயரும்
3 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட உள்ளதால் தங்கத்தின் விலை வரும் நாட்களில் கணிசமாக அதிகரிக்கும் என்று நகை வணிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வரி உயர்வால் கள்ளச்சந்தை விற்பனை மற்றும் தங்கம் கடத்தல் போன்றவையும் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளனர். தங்கத்தின் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு, நகை வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செருப்பு, ஆயத்த ஆடைகள்
ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் ஜி.எஸ்.டி வரி விதிப்பால், 500 ரூபாய்க்கு மேல் உள்ள காலணிகள் மற்றும் 1000 ரூபாய்க்கு மேல் உள்ள ஆயத்த ஆடைகளின் விலையும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. பாக்கெட் உணவுகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படவுள்ளது.
பிஸ்கெட் 18%
பிஸ்கெட்களுக்கு ஜிஎஸ்டியில் 18 சதவீத வரி விதிக்கப்படவுள்ளது. தற்போது குறைந்த விலை பிஸ்கெட்களுக்கு சராசரியாக 20.6 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டியில் இது குறையும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். தங்கம், வைரத்தை விட சாப்பிடும் உணவுப் பொருட்கள், பிஸ்கெட்டுகளுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிகரெட்டுக்கு வரி ஜூன்11ல் முடிவு
உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலைப் பொருட்களுக்கான வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், சிகரெட்டுக்கு வரி விகிதம் நிர்ணயிக்கப்படவில்லை. வரும் 11ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் அதுகுறித்து முடிவு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.