கேரளாவில் வரலாறு காணாத மழையால் ரூ.3000 கோடி இழப்பு
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் 73 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒரே நாளில் அம்மாநிலத்தில் ரூ.3,000 கோடிக்கு மேலான இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தினால் 3,393 ஹெக்டேர் அளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ரூ.55.18 கோடி மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒரே நாளில் ரூ.3,000 கோடிக்கு மேலான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பெருமழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. மலை பகுதிகளான இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், ஆலப்புழா, எர்ணாகுளம் உள்ளிட்ட 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கேரளாவில் ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகள், உடைமைகள் ஆகியவற்றை இழந்து முகாம்களில் தங்கி வருகின்றனர். கேரள மக்களுக்கு உதவும் வகையில், நாடெங்கும் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
கனமழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக ஏற்கனவே 58 பேர் இறந்திருந்த நிலையில் பலி எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், மக்களை பாதுகாப்பாக இருக்கும் படி அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.
வெள்ளப் பெருக்கு குறைந்து நிலைமை சீராகிவிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் பெருமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் கேரள மாநிலத் தோட்டத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதோடு அதிகளவில் பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது.
வெள்ளப் பெருக்கு காரணமாகக் கேரள மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களான மூணார், வயநாடு உள்ளிட்ட பகுதிகளும், சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் வருகையும் அதன் வாயிலாகக் கிடைக்கும் வருவாயிலும் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் கைவிடப்பட்டு, வெள்ள நிவாரணம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது.
கேரள மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை அமைப்பு வெளியிட்டிருந்த அறிக்கையில், 3,393 ஹெக்டேர் அளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ரூ.55.18 கோடி மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒரே நாளில் கேரள மாநிலத்தில் ரூ.3,000 கோடிக்கு மேலான இழப்பு வெள்ள பாதிப்பால் ஏற்பட்டுள்ளதாக அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு இல்லாமல் இருந்ததாகவும், இப்போது ஏற்பட்டுள்ள பெரு மழையால் அப்பகுதிகளிலும் இழப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications