நாளை தங்கம் விலை ஏறுமா? குறையுமா? எல்லாம் "அவர்" சொல்ல போகும் ஒரு வார்த்தையில் தான் அடங்கியிருக்கு
வாஷிங்டன்: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கம் எனக் கலந்தே இருந்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவில் இன்று மிக முக்கியமான ஒரு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்போகும் முடிவைப் பொறுத்தே தங்கம் விலை இருக்கப் போகிறது.. அப்படி என்ன கூட்டம் அது.. யார் எடுக்கும் முடிவால் தங்கம் விலை மாறப் போகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் எப்போது பதவிக்கு வந்தாரோ அப்போது முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. டிரம்ப் எப்போது என்ன செய்வார் என்றே தெரியாது. இதன் காரணமாகவே தங்கம் விலை அப்போது மளமளவென அதிகரித்து உச்சத்தைத் தொட்டது. குறிப்பாகக் கடந்த மாதம் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.

அதிபர் டிரம்ப்
அதாவது ஏப்ரல் தொடக்கத்தில் டிரம்ப் உலக நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். இதனால் சர்வதேச அளவில் வணிகப் பதற்றம் ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பான முதலீடாக அறியப்படும் தங்கத்தின் மீது மக்கள் தங்கள் பார்வையைத் திருப்பினர். இதனால் தங்கம் விலை பட்டெனப் பறந்தது. இருப்பினும், சில நாட்களில் ரெசிப்ரோக்கல் வரியை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் பேக் அடித்தார். இதனால் தங்கம் விலை மெல்லக் கட்டுக்குள் வந்தது.
இருப்பினும், அமெரிக்கா சீனா இடையேயான போர்ப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் கடந்த மாதம் இறுதியில் தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டது. அதன் பிறகு பேச்சுவார்த்தைக்குத் தயார் என இரு தரப்புமே சொல்ல இரண்டு வாரங்களாகத் தங்கம் விலை சரிந்தது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்ததால் அது இந்தியச் சந்தையிலும் எதிரொலித்தது.
தங்கம் விலை
குறிப்பாகக் கடந்த மே 3, 4ம் தேதிகளில் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8775 வரை குறைந்தது. அப்பா இனி தங்கம் விலை குறையும் என்று மக்கள் கொஞ்சம் ஆசுவாசப்பட்ட நிலையில், உடனே தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த மே 5ம் தேதி ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்தது. நேற்றைய தினம் மே 6ம் தேதி ஒரே நாளில் இரண்டு முறை ஆபரணத் தங்கம் விலை உயர்ந்து ரூ.9100 வரை போனது. இன்று சற்றே குறைந்த தங்கம் விலை ரூ.9025க்கு வர்த்தகமாகிறது.
சர்வதேச மார்க்கெட்
சர்வதேச மார்க்கெட்டில் தங்கம் விலையில் ஏற்படும் மாற்றமே இந்தியச் சந்தையில் எதிரொலித்து வருகிறது. இன்றைய தினம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று குறைந்தே வர்த்தகமாகி வருகிறது. இந்திய நேரப்படி 7.45 மணியளவில் அமெரிக்காவில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 1.2% குறைந்து 3386 டாலருக்கு வர்த்தகமானது (இந்திய மதிப்பில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9,218.79). அதேபோல கோல்ட் ப்யூச்சர்ஸ் ஒரு அவுன்ஸ் 0.75% குறைந்து 3396 டாலருக்கு வர்த்தகமானது. (இந்திய மதிப்பில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9,246.03).

அவர் சொல்லும் ஒரு வார்த்தை
சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்.. அமெரிக்காவில் நேற்றும் இன்றும் அந்நாட்டின் மத்திய பெடரல் வங்கி கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு பெடரல் வங்கி கவர்னர் ஜெரோம் பவல் செய்தியாளர்களைச் சந்தித்து, வட்டி விகிதம் குறித்த முடிவை எடுப்பார். பொதுவாக வட்டியைக் குறைத்தால் தங்கம் விலை உயரும். வட்டியை அதிகரித்தால் தங்கம் விலை குறையும். தற்போதைய சூழலில் அவர் வட்டியைக் குறைக்க வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது.
அதுபோக அமெரிக்கப் பொருளாதாரம் குறித்தும் இந்தாண்டு வட்டியை எந்தளவுக்குக் குறைக்கத் திட்டமிட்டுள்ளார் என்பது குறித்தும் முக்கிய தகவல்களையும் பகிர்வார். இதுவே தங்கம் விலையில் மேஜர் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. இந்திய நேரப்படி இன்று 11.30 மணியளவில் இந்தச் செய்தியாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. அதன் பிறகே தங்கம் விலையில் ரியல் மாற்றம் தெரியும். அதுவே நாளை இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கும்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்












Click it and Unblock the Notifications