பொறுமை இழந்த மன்மோகன் சிங்.. "பிரித்தாளுகிறது பாஜக.." வெளியிட்ட அதிரடி வீடியோ!
சண்டிகர்: ‛‛பிரித்தாளும் கொள்கையே பாஜகவின் தேசப்பற்று'' என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமர் நரேந்திர மோடியின் அரசை விமர்சனம் செய்தார்.
Recommended Video
பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சரண்ஜித் சன்னி முதலமைச்சராக உள்ளார். மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 20ல் தேர்தல் நடைபெற உள்ளது.
ஆளும் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் மாநிலத்தில் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
பாஜக கூட்டணியில் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், முன்னாள் மத்திய அமைச்சர் சுக்தேவ் சிங் தின்ட்சாவின் எஸ்ஏடி கட்சிகள் உள்ளன. இதில் பாஜக 65 இடங்களிலும், அமரீந்தர் சிங் கட்சி 37 இடங்களிலும், தின்ட்சாவின் கட்சி 15 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

காங்கிரஸ் போராட்டம்
இந்தியாவில் பஞ்சாப்பில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி உள்ளது. இதனால் மீண்டும் பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் போராடி வருகிறது. இதனால் காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் ஜேபிநட்டா, மத்திய அமைச்சர்கள் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்ஆத்மி சார்பில் அதன் தலைவர் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
மும்முனை போட்டியால் ஒவ்வொரு கட்சி தலைவர்களும், பிற கட்சியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

வீடியோவில் மன்மோகன்சிங்
இந்நிலையில் பஞ்சாப் தேர்தலையொட்டி அம்மாநில மக்களிடம் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வீடியோவில் பேசியுள்ளார். இதை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இந்த வீடியோவில் மன்மோகன்சிங் கூறியதாவது:

புரிதல் இல்லாத பாஜக
இந்தியாவில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறி வருகின்றனர். இந்த இரண்டு விஷயத்துக்கும் அரசின் தவறான கொள்கைள் தான் காரணம். மத்திய பாஜக அரசுக்கு பொருளாதார கொள்கைகள் குறித்த புரிதல் இல்லை. இதுதவிர பிற நாடுகளுடனான வெளியுறவு கொள்கையிலும் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது. இதை மறைக்கவே எல்லையில் சீன படைகள் உள்ளதாகவும், அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி வருகின்றனர்.

பிரித்தாளும் கொள்கை
அரசியல்வாதிகளை கட்டிப்பிடிப்பதாலோ அல்லது விருந்துக்கு அழைக்காத நிலையில் அங்கு சென்று இலவச பிரியாணி சாப்பிடுவதாலோ உறவுகள் மேம்படாது. மத்திய பாஜக அரசின் தேசப்பற்று என்பது பிரிட்டிஷ்காரர்களின் பிரித்தாளும் கொள்கையை அடிப்படையாக கொண்டது. இதனால் இந்தியாவின் அரசியலமைப்பு நிறுவனங்கள் பலம் இழந்துள்ளன.

மக்கள் நினைவில்
காங்கிரஸ் கட்சியின் சிறந்த செயல்பாடுகளை மக்கள் நினைவில் வைத்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக பாஜகவினர் கூறி பஞ்சாப் முதல்வர் மற்றும் மக்களை அவமதிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர்'' என விமர்சனம் செய்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications