பஞ்சாப் குளறுபடி: துடித்துப்போன பாஜகவினர்! பிரதமர் மோடி நலனுக்காக கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள்
சண்டிகர்: பிரதமர் நரேந்திர மோடி நேற்று பஞ்சாப் மாநிலத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் 42,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். மோசமான வானிலை காரணமாக பிரதமர் ஹெலிகாப்டரில் செல்லாமல் சாலை மார்க்கமாக சென்றார்.
பதிண்டா என்ற இடத்தில் சென்றபோது விவசாயிகள் அந்த பகுதியில் மறியலில் ஈடுபட்டதால் பிரதமர் வாகனம் மேற்கொண்டு செல்ல முடியாமல் தவித்தது. பதிண்டா பகுதி மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் காண்வாய் சுமார் 20 நிமிடங்கள் வரை நின்றது.

பிரதமருக்கு நேர்ந்த பாதுகாப்பு குளறுபடி
இந்த பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்தார். பிரதமர் சாலை வழியாக பயணிக்கும்போது பஞ்சாப் அரசு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதனை பஞ்சாப் அரசு செய்ய தவறி விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக குற்றம்சாட்டியது. இது தொடர்பாக பஞ்சாப் அரசு விசாரிக்க வேண்டும் என்றும் விட்டது.

பஞ்சாப் முதல்வர் விளக்கம்
உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பிரதமரின் பாதுகாப்பு குறைபாட்டுக்கு பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி '' பிரதமர் மோடி விமானம் மூலம் வருவதாக முதலில் திட்டமிட்டிருந்தார், ஆனால் எங்களுக்கு தெரிவிக்காமல் சாலை வழியாக வந்தார். ஆனாலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்றார்.

விசாரணை குழு அமைப்பு
இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் பெரோஸ்பூர் போலீஸ் எஸ்.பி ஹர்மன் ஹன்ஸ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், பாதுகாப்பு குளறுபடி காரணமா என்பது பற்றி விசாரணை நடத்த விசாரணை குழுவை பஞ்சாப் அரசு அமைத்துள்ளது. 3 நாட்களில் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாஜகவினர் பிரார்த்தனை
இந்த விவகாரத்தில் இந்தியா முழுவதும் பாஜகவினர் பொங்கியெழுந்து விட்டனர். பஞ்சாப் அரசுக்கு கண்டன குரல்களை பதிவு செய்து வருகின்றனர். பாதுகாப்பு குறைபாடு எழுந்துள்ள நிலையில் , பிரதமர் மோடி நீண்ட ஆயுளை பெற வேண்டும் என்று நாடு முழுவதும் பாஜகவினர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக தேசிய துணைத் தலைவரும், மத்தியப் பிரதேச முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான், போபாலில் உள்ள குஃபா கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

தமிழகத்திலும் வழிபாடு
108 வேத விற்பன்னர்களுடன் சேர்ந்து அவர் மஹாமிருத்யுஞ்சய் மந்திரத்தை உச்சரித்தார். இதேபோல் பாஜக தேசிய துணைத் தலைவர் பைஜயந்த் ஜெய் பாண்டா, டெல்லியில் உள்ள ஜாண்டேவாலன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் நீண்ட ஆயுளுக்காக 'மஹாமிருத்யுஞ்சய் ஜப்' நிகழ்ச்சி நடத்தினார்.பல்வேறு மாநிலங்களிலும் பாஜகவினர் வழிபாட்டில் பங்கேற்று வருகின்றனர். தமிழகத்திலும் பாஜகவினர் கோவில்களில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications