சித்து 'நிலையான' மனிதர் அல்ல என அப்பவே நான் சொன்னேன்...இப்ப நிரூபிச்சுட்டார்-அமரீந்தர்சிங் அட்டாக்
சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நவ்ஜோத்சிங் சித்துவை முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங் மீண்டும் சீண்டி ட்விட்டரில் பதிவு போட்டுள்ளார்.
Recommended Video
பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர்சிங் (அமரிந்தர்சிங்) ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் 50 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியதால் அமரிந்தர்சிங் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடி உருவானது.
அமரீந்தர்சிங் பதவி பறிபோனதற்கு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த சித்துதான் காரணம். இதனால் சித்துவை மிக கடுமையாக விமர்சித்து தேச பாதுகாப்புக்கு எதிரானவர் என சாடினார் அமரீந்தர்சிங்.
பஞ்சாப் அரசியலில் திடீர் திருப்பம்- பாஜகவில் இணைகிறாரா மாஜி முதல்வர் அமரீந்தர்சிங்?
சித்துவுக்கு எதிர்ப்பு
அதேநேரத்தில் முதல்வர் பதவி சித்துவுக்கு கிடைத்துவிடக் கூடாது என்பதில் அமரீந்தர்சிங் மிகவும் உறுதியாக இருந்தார். இதனால் சித்துவுக்கு கிடைக்க வேண்டிய முதல்வர் பதவி கிடைக்கவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் முதல் முறையாக தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித்சிங் முதல்வரானார்.
சித்து ஆதங்கம்
சரண்ஜித்சிங் தமது ஆதரவாளர் என்றாலும் கூட முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தில்தான் இருந்தார் சித்து. அதேநேரத்தில் அமரீந்தர்சிங் டெல்லி சென்று பாஜகவில் இணையப் போகிறார் என்கிற தகவல் பெரும் பரபரப்பை கிளப்பியது. அமரீந்தர்சிங் பாஜகவுக்கு போனால் பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகும் என டெல்லி மேலிடம் ஆடிப் போனது.
காங். தலைவர் பதவி ராஜினாமா
இதனையடுத்து வேறுவழியே இல்லாமல் சித்து தமது காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் தாம் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து நீடிப்பேன்; பஞ்சாப்பின் வளர்ச்சியில் சமரசம் செய்துகொள்ளமாட்டேன் என்றும் சித்து தமது ராஜினாமா கடிதத்தில் கூறியிருந்தார். அமரீந்தர்சிங் டெல்லி பயணம், சித்துவின் ராஜினாமா என பஞ்சாப் அரசியல் களம் அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அமரீந்தர்சிங் கருத்து
இந்நிலையில் சித்துவின் ராஜினாமா குறித்து அமரீந்தர்சிங் கருத்து தெரிவித்து சீண்டியிருக்கிறார். தமது ட்விட்டர் பக்கத்தில், சித்து ஒரு நிலையான மனிதர் அல்ல என ஏற்கனவே சொல்லி இருக்கிறார். பஞ்சாப் போன்ற எல்லை மாநிலத்துக்கு அவர் தகுதியானவரும் அல்ல. அதைத்தான் இப்போது வெளிப்படுத்தி இருக்கிறார் என அமரீந்தர்சிங் பதிவிட்டுள்ளார். அமரீந்தர்சிங்கின் இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.