Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஞ்சாப், உத்தரகாண்ட்.. ஜெயிக்க வேண்டிய மாநிலங்களில் தான் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்ட பரிதாப காங்.

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்/டேராடூன்: பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல்களில் வெல்லும் வாய்ப்பிருந்தும் உட்கட்சி பூசல்களால் எளிதான வெற்றியை தாரைவார்த்துக் கொடுத்து கொண்டிருக்கிறது காங்கிரஸ் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

பஞ்சாப், உத்தரகாண்ட் மாநில சட்டசபைகளுக்கு வரும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவும் ஆட்சியில் இருக்கின்றன.

2017 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்று அமரீந்தர்சிங் முதல்வரானார். அமரீந்தர்சிங் அமைச்சரவையில் மாஜி கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங், இடம்பெற்றார். அமைச்சரவையில் சித்து இடம்பெற்றது முதலே காங்கிரஸுக்கு அங்கே ஆகப் பெரும் அதளபாளக் குழி வெட்டப்பட்டுவிட்டது.

அமரீந்தர்சிங்- சித்து

அமரீந்தர்சிங்- சித்து

முதல்வர் அமரீந்தர்சிங்குக்கு சித்து கொடுத்த குடைச்சல் கொஞ்சம் நஞ்சமல்ல.. ஒருகட்டத்தில் அமைச்சரவையில் இருந்து விலகினார் சித்து. அத்துடன் அமரீந்தர்சிங்குக்கு எதிராக எம்.எல்.ஏ.க்களை அணிதிரட்டினார். அமரீந்தர்சிங்- நவ்ஜோத்சிங் சித்து இடையேயான அக்கப்போரை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் காங்கிரஸ் மேலிடம் தவியாய் தவித்துப் போனது. சண்டிகருக்கும் டெல்லிக்குமாக பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் படையெடுத்து பார்த்தும் பஞ்சாயத்து ஓயவில்லை. ஒருகட்டத்தில் நவ்ஜோத்சிங் சித்து, பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போதும் கூட அமரீந்தர்சிங் பெரும் போராட்டத்துக்குப் பின்னர் அதை ஏற்றார். ஆனால் சித்துவோ, அமரீந்தர்சிங்கிடம் இருந்து முதல்வர் பதவியை பறிப்பதில் தீவிரம் காட்டினார். அப்போதும் காங்கிரஸ் மேலிடம் தீர்வு காண்பதில் தீவிரம் காட்டாமலேயே இருந்தது.

வெளியேறிய அமரீந்தர்சிங்- தொடரும் சித்து சேட்டை

வெளியேறிய அமரீந்தர்சிங்- தொடரும் சித்து சேட்டை

இதனால் வெறுத்துப் போன அமரீந்தர்சிங், முதல்வர் பதவியும் வேண்டாம்... காங்கிரஸ் கட்சியும் தேவை இல்லை என தூக்கி எறிந்துவிட்டு பாஜகவின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இதையடுத்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி பொறுப்பேற்றார். இதன்பின்னராவது பஞ்சாப் காங்கிரஸ் உட்கட்சி மோதல் முடிவுக்கு வரும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனாலும் அடங்காத நவ்ஜோத்சிங் சித்து இப்போதுவரை சரண்ஜித்சிங்குடன் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறார். இதனிடையே மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்து நாடகமாடினார் சித்து. பின்னர் மீண்டும் அந்த பதவியை ஏற்றுக் கொண்டார். இப்போது வரை பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் திசைக்கு ஒரு நவகிரகங்களைப் போல பயணிக்கின்றனர்.

பறிபோகும் வெற்றி

பறிபோகும் வெற்றி

இதனை சரிசெய்யவும் காங்கிரஸ் மேலிடம் களமிறங்கவில்லை. இதன்விளைவுகள்தான் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுப்பது உறுதி என கட்டியம் கூறுகின்றன கருத்து கணிப்புகள். பஞ்சாப் மாநிலத்தில் எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் எனவும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அதேநேரத்தில் தொங்கு சட்டசபை அமையக் கூடும் என கருத்து கணிப்புகள் கூறுவதால் வெல்லப் போகும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், அதே கட்சியில் இருப்பார்களா? கட்சி தாவுவார்களா? என்பதும் தெரியாத நிலைதான்.

உத்தரகாண்ட் பாஜக

உத்தரகாண்ட் பாஜக

உத்தரகாண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரையில் ஆளும் பாஜக படுபலவீனமாகவே இருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா பரவல் தடுப்பை அம்மாநில பாஜக அரசு கையாண்டவிதம் உள்ளிட்டவைகளால் மக்களிடையே கடும் அதிருப்தி இருக்கிறது என்கின்றன ஊடக செய்திகள். இந்த நிலையில் பாஜகவின் உட்கட்சி பூசல்களால் அடிக்கடி முதல்வர்களை மாற்ற வேண்டிய நெருக்கடியில் அக்கட்சி சிக்கியது. 4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த திரிவேந்திரசிங் ராவத்துக்கு எதிராக பாஜக தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் அவர் தமது பதவியை ராஜினாமா செய்தார். ராவத்துக்குப் பதில் தீரத்சிங் ராவத் புதிய முதல்வரானார். இவரது பதவி காலத்தில்தான் கொரோனா 2-வது அலை சர்ச்சையில் சிக்கிய ஹரித்வார் கும்பமேளா நடத்தப்பட்டது. இதனால் தீரத்சிங் ராவத்தும் நீக்கப்பட்டது புஷ்கர்சிங் தாமி புதிய முதல்வரானார். 4 மாதங்களில் 3 முதல்வர்கள் என்கிற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது பாஜக.

குழப்பம் விளவிக்கும் மாஜி முதல்வர்

குழப்பம் விளவிக்கும் மாஜி முதல்வர்

பாஜகவில் நிகழும் இத்தகைய குளறுபடிகள், பாஜக அரசுக்கு எதிரான மக்கள் அதிருப்தி அலை இவற்றை வைத்து அறுவடை செய்தால் எளிதாக காங்கிரஸ் கட்சியால் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற முடியும். ஆனால் முதல்வர் வேட்பாளர் யாருக்கு என்பதை வைத்து காங்கிரஸில் கோஷ்டி பூசல் வெடித்திருக்கிறது. இந்த கலகக் குரலை எழுப்பியவர் காங்கிரஸ் மேலிடத்துக்கு மிகவும் நம்பிக்கையானவரான மாஜி முதல்வர் ஹரீஷ் ராவத். இவர்தான் பஞ்சாப் பஞ்சாயத்துக்கு சமரசம் பேசிய நாட்டாமை. இப்போது அந்த நாட்டாமையே காங்கிரஸில் ஆட்டத்தை கலைத்து கலகப் போக்குடன் ட்வீட்டுகளைப் போட்டு வருவதால் காங்கிரஸில் குழப்பம் அதிகரித்திருக்கிறது. எளிதாக வெல்லக் கூடிய பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் தலைவர்களின் ஈகோ, பதவி ஆசைகளால் தாங்களே தங்கள் தலையில் மண்ணை அள்ளி அள்ளி போட்டுக் கொண்ட கதையாக வெற்றியை தொலைத்துக் கொண்டிருக்கிறது அந்தோ பரிதாப காங்கிரஸ்!.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+