ஹரியானா:பெரும்பான்மை இல்லாத பாஜக ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்? காங்கிரஸ் வியூகம் என்ன?
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு பெரும்பான்மை இழந்துவிட்ட நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான சாத்தியங்கள் குறித்து காங்கிரஸ் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்போம் என முன்னாள் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா அறிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டு ஹரியானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 90 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் ஆட்சி அமைக்க தேவை 46 இடங்கள். ஆனால் 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜக 40; காங்கிரஸ் 30; துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி 10 இடங்களில் வென்றன. சுயேட்சைகள் 7-ல் வெற்றி பெற்றிருந்தனர்.

2019-ல் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் துஷ்யந்த் சவுதாலாவின் 10 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது. கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டவை ஆளும் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது. இதனால் பாஜக கூட்டணி அரசுக்கான ஆதரவை துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கடந்த மார்ச் மாதம் வாபஸ் பெற்றது.
ஜேஜேபி ஆதரவை வாபஸ் பெற்ற போதும் சுயேட்சைகள் ஆதரவுடன் நூலிழைப் பெரும்பான்மையில் தொங்கிக் கொண்டிருந்தது ஹரியானா பாஜக அரசு. கடந்த சில நாட்களுக்கு ஹரியானா பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வந்த 3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
தற்போதைய நிலையில் ஹரியானா சட்டசபையில் 88 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2 இடங்கள் காலியாக உள்ளன. பாஜகவுக்கு சுயேட்சைகள் ஆதரவுடன் 43 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்; ஆனால் பெரும்பான்மைக்கு தேவை 45 எம்.எல்.ஏக்கள். இதனால் காங்கிரஸ்- ஜேஜேபி மற்றும் சுயேட்சைகள் இணைந்து ஆட்சி அமைக்க கூடிய சாத்தியம் உள்ளது.
ஆனால் ஹரியானா சட்டசபைக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து பாஜக ஆட்சியை கவிழ்க்க முடியுமா? என்பது காங்கிரஸின் வியூகம். அதேநேரத்தில் கடந்த மார்ச் மாதம்தான் பாஜக அரசு நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றி பெற்றிருந்தது. அடுத்த 6 மாதங்களுக்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடியாத சட்ட சிக்கல் இருக்கிறது. இதனால் சட்ட வல்லுநர்களுடன் காங்கிரஸ் மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதனை ஆதரிக்க தயாராக இருப்பதாகவும் ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா அறிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சி என்ன வியூகத்தை கையில் எடுக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications