12 வயதில் திமுகவை படித்தவர்.. பஞ்சாப்பில் காங்.கை காலி செய்யும் "காமெடியன்".. பரபர இன்சைட் சர்வே!
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரசை பின்னுக்கு தள்ளி ஆம் ஆத்மி கவனம் பெற தொடங்கி உள்ளது. அங்கு பெரும்பாலும் தொங்கு சட்டசபை உருவாகும் என்று கணிப்புகள் தெரிவித்தாலும் ஆம் ஆத்மிதான் அதிகபட்ச இடங்களை வெல்லும் என்று களநிலவரம் தெரிவிக்கின்றது.. பஞ்சாப்பில் வலுவாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு இப்போது ஆம் ஆத்மியை சேர்ந்த காமெடியன் ஒருவர் வில்லனாக வந்து சேர்ந்து இருக்கிறார்.
விளாடிமர் சேலன்ஸ்கி.. இந்த பெயரை நீங்கள் சமீபத்தில் கேள்விப்பட்டு இருப்பீர்கள். உக்ரைன் நாட்டு ஸ்டாண்ட் அப் காமெடியன் இவர். அந்த நாட்டு அதிபர் பெட்ரோவை எதிர்த்து தேர்தலில் நின்றதோடு அதில் வெற்றிபெற்று உக்ரைன் நாட்டு அதிபராகவும் வென்றார். 2019ல் உக்ரைன் நாட்டு அதிபராக இந்த காமெடியன் வென்ற போது உலகமே அதை திரும்பி பார்த்தது.
அந்த தேர்தலில் விளாடிமர் சேலன்ஸ்கி வெற்றிபெற அவரின் கலக்கலான பிரச்சாரமும் ஒரு காரணமாக இருந்தது. ஆம்.. அவர் சொன்ன "ஒன் லைன்" காமெடிகள் அந்த நாட்டு ஆளும் தரப்பை அசைத்து பார்த்தது. அப்படி பஞ்சாப்பை ஆளும் கட்சியை தனது காமெடியால் அசைத்து பார்த்து வருபவர்தான் பகவன் சிங் மன்.. பஞ்சாப்பில் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் இவர்தான்!
பஞ்சாப் காங். முதல்வர் வேட்பாளர் யார்? மாற்றி மாற்றி பேசும் நவ்ஜோத் சிங் சித்து! தொண்டர்கள் குழப்பம்
பஞ்சாப்பில் பார்க்கலாம்
பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக பகவன் சிங் மன்னை ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தது மிகப்பெரிய அரசியல் மாஸ்டர் ஸ்டிரோக்காக பார்க்கப்படுகிறது. பஞ்சாப்பில் ஏதாவது ஒரு பஸ்ஸில் ஏறி கொஞ்சம் தூரம் போனால் போதும் சத்தமாக சிரித்து.. அரசியலை பகடி செய்து பேசிக்கொண்டு இருக்கும் ஒரு சிங்கை கண்டிப்பாக பார்ப்பீர்கள்.. அப்படி ஒரு காமன் மேன் தோற்றம் கொண்ட எப்போது சிரித்து கலகலப்பாக இருக்கும் காமெடியன்தான் பகவன் சிங் மன்.
வசதியான குடும்பம்
பஞ்சாப்பில் ஜாட் சிங் குடும்பத்தில் வசதியான பின்னணியோடு பிறந்த பகவன் சிங் மன்னுக்கு லட்சக்கணக்கில் சொத்துக்கள் இருந்தது. வசதியாக குடும்பம். பஞ்சாப் பல்கலையில் படித்தவர். அங்குதான் தன்னுடைய காமெடி வாழ்க்கையை தொடங்கினார். மேடைகளில் ஏறி ஸ்டான்ட் அப் காமெடி செய்தவர் 1990கள் தொடக்கத்திலேயே அதை சிடி கேசட்டில் விற்க தொடங்கினார். இவரின் காமெடிகள் வேகமாக வைரலாகி மக்களிடம் பிடித்த நபராக மாறிப்போனார்.. 90ஸ்களில் தமிழில் எப்படி சில சன் டிவி நிகழ்ச்சிகள் பிரபலமாக இருக்குமோ அப்படித்தான் இவரின் பஞ்சாப்பில் காமெடிகளும்.
காமெடி
அரசியல் கலந்து காமெடி செய்வது இவரின் வழக்கம். இவரின் அப்பா தீவிர அரசியல் பிரியர். அரசியல் என்றால் வடஇந்திய அரசியல் மட்டுமல்ல தென்னிந்திய அரசியலையும் கரைத்து குடித்தவர் இவரின் அப்பா. இதனால் அரசியல் கவனம் செலுத்திய பகவன் சிங் மன்.. திமுக பற்றி 12 வயது இருக்கும் போதே தான் படித்ததாக ஒரு பேட்டியில் கூட குறிப்பிட்டு இருக்கிறார். அப்பாவின் அரசியல் ஆர்வம் காரணமாக அரசியலை படித்து படித்து.. அதை வைத்து ஸ்டான்ட் ஆப் காமெடி செய்ய தொடங்கியதாக இவர் பேட்டி ஒன்றிலும் குறிப்பிட்டு இருக்கிறார்.
காமெடி அரசியல் பக்கம் பார்வை
முக்கியமாக சிறு வயதில் இருந்தே காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனம் கொண்டவர்.. எமர்ஜன்சி மீதான கோபம்.. பொற்கோவில் உள்ளே ராணுவம் சென்றது ஆகியவை ஒரு காரணம். இன்னொரு காரணம் பகத் சிங் மீதான ஈர்ப்பு. காங்கிரசை பகத் சிங் ஏற்றுக்கொண்டதே இல்லை.. நான் மட்டும் எப்படி ஏற்பேன் என்பதுதான் இவர் ஆம் ஆத்மியில் சேர்ந்த பின் சொன்ன கருத்து.. அந்த அளவிற்கு இவருக்கு காங்கிரஸ் என்றாலே ஆகாது. இவரின் மஞ்சள் நிற டர்பனும் பகத் சிங் மீதான அன்பால்தான்.
அரசியல் நுழைவு
இதனால்தான் என்னவோ தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் எதிர்ப்பு இவர் ஸ்டான்ட் அப் காமெடிகளில் தூக்கலாக இருக்கும். காமெடி என்றால் அப்படியே சொல்லிவிட்டு கடந்து செல்லும் காமெடி அல்ல.. திராவிட கட்சிகள் எப்படி வலிமையான மேடை பேச்சுக்கள் மூலம் மக்களை தன் பக்கம் திருப்பியதோ அதைத்தான் காமெடி பேச்சுக்கள் மூலம் பகவன் சிங் மன் பஞ்சாப்பில் செய்து வருகிறார். 2011ல் அரசியல் ஆர்வத்தால் பீப்பிள் பார்ட்டி ஆப் பஞ்சாப்பில் செயல்பட்டு வந்தார். 2012ல் சட்டசபை தேர்தலில் அக்கட்சி சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
கவனம்
ஆனாலும் இவரின் அரசியல் நடவடிக்கைகள் கவனம் பெற்றன. ஆம் ஆத்மி டெல்லி வெற்றிக்கு பின் பஞ்சாப்பில் கால் பதிக்க நினைத்த போது கெஜ்ரிவால் அணுகியது பகவன் சிங் மன்னைதான். உடனே பிபிபி கட்சியில் இருந்து விலகி ஏஏபி கட்சியில் இணைந்தார் பகவன் சிங் மன். 2014 லோக்சபா தேர்தலில் பஞ்சாபில் சங்ரூர் தொகுதியில் வென்றார். டெல்லியில் கூட ஆம் ஆத்மி லோக்சபா சீட்டை வெல்ல முடியாத நிலையில் இவர் பஞ்சாப்பில் ஆம் ஆத்மியை ஒரு தொகுதி வெல்ல வைத்து அசத்தினார். 2019ல் மீண்டும் அதே தொகுதியில் வென்று லோக்சபா சென்றார்.
முதல்வர் முகம்
இவரின் காங்கிரஸ் எதிர்ப்பு இப்போது இவரை முதல்வர் வேட்பாளர் ஆக்கும் நிலைக்கு தள்ளி உள்ளது. இடையில் 2019ல் அரசியல் கூட்டம் ஒன்றில் இவர் குடி போதையில் தள்ளாடியது பெரிய சர்ச்சையானாலும் பின்னர் மேடை கூட்டம் ஒன்றில் தனது தாய் மீது சத்தியம் செய்து குடிப்பதை நிறுத்துவதாக கூறினார். இப்போது இவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததன் மூலம் பஞ்சாப்பில் காங்கிரசுக்கான வெற்றி வாய்ப்பு குறைந்து கொண்டே வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. இதை நான் சொல்லவில்லை.. காங்கிரஸ் நடத்திய தேர்தல் சர்வே ஒன்றில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
காங்கிரஸ் சர்வே
காங்கிரஸ் நடத்திய இன்சைட் சர்வேவின் படி.. ஆம் ஆத்மி கட்சி பகவன் சிங் மன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததில் இருந்தே அக்கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளதாம். முக்கியமாக மால்வா மண்டலத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் 117 இடங்கள் உள்ளன. அதில் மால்வா மண்டலத்தில் 69 இடங்கள் உள்ளன. இங்குதான் பகவன் சிங் மன்னிற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. பகவன் சிங் மன் மால்வா பகுதியை சேர்ந்தவர்.. அங்கு உள்ள சங்ரூர் லோக்சபா எம்பி.. கடந்த சட்டசபை தேர்தலில் இங்குதான் ஆம் ஆத்மி 18 இடங்களை வென்றது .
பகவன் சிங் மன் முன்னேற்றம்
இந்த நிலையில் பகவன் சிங் மன் வருகையால் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த மண்டலத்திலும் அருகாமையில் இருக்கும் மற்ற மாவட்டங்களிலும் ஆதரவு அதிகரித்து வருவதாக காங்கிரஸ் உட்கட்சி சர்வே தெரிவித்து உள்ளதாம். முதல் விஷயம் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் நிலவுகிறது. அம்ரிந்தர் சிங் இல்லை. இரண்டாவது சித்துவிற்கும் முதல்வர் சரண்சித் சிங் சன்னிக்கும் இடையில் மோதல் நிலவுகிறது. இதனால் களத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் சரியாக வேலை செய்யவில்லை.
காங்கிரஸ் பின்னடைவு
இப்படி இருக்கும் போதுதான் பகவன் சிங் மன் வருகை காங்கிரசை மேலும் பின்னடைவு அடைய செய்துள்ளதாக காங்கிரஸ் சர்வேவில் கூறப்பட்டுள்ளது. முதலில் சரண்சித் சிங் சன்னி முதல்வராக அறிவிக்கப்பட்ட போது அது காங்கிரஸ் மீதான நம்பிக்கை அதிகப்படுத்தியதாகவும், ஆதரவு அதிகரித்ததாகவும், ஆனால் ஆம் ஆத்மி பகவன் சிங் மன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்த பின் காங்கிரசுக்கு சறுக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த உட்கட்சி சர்வேவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாம்... பெரும்பான்மை பெறுவது கஷ்டம்.. தேர்தல் பிரச்சாரத்தை முறையாக முடுக்கி விட வேண்டும் என்று இந்த உட்கட்சி சர்வே காங்கிரசுக்கு அறிவுறுத்தி உள்ளதாம்.. பகவன் சிங் மன் முதல்வர் ஆனாலும் ஆகிவிடுவார் என்றுதான் அம்மாநில வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் காமெடியாக பஞ்சாப்பில் வலம் வந்த பகவன் சிங் மன் இப்போது அம்மாநில ஆளும் கட்சிக்கு வில்லனாக மாறி இருக்கிறார்.. விளாடிமர் சேலன்ஸ்கி உக்ரைனில் மாறியது போலவே!