'நான் இனிமையான தீவிரவாதி' - பஞ்சாப் பிரசாரத்தில் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அரவிந்த் கெஜ்ரிவால்!
சண்டிகர்: பஞ்சாப் தேர்தலில் நாளுக்கு நாள் புதுவித காட்சிகள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், தன்னை ஒரு இனிமையான தீவிரவாதி என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பஞ்சாப் மாநிலத்தில் மெதுவாக காலூன்றி வரும் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாபில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியாக இருக்கிறது. இந்நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆம் ஆத்மியை தீவிரவாதிகளுடன் தொடர்புபடுத்தி பிரசாரம் செய்து வருகின்றன.

பிரதமர் மோடி
ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபை உடைக்க விரும்புகிறார்கள். அதிகாரத்தைப் பெற பிரிவினைவாதிகளுடன் கைகோர்க்கத் தயாராக உள்ளனர். தேவைப்பட்டால் நாட்டை உடைக்கத் தயாராக உள்ளனர். அவர்களின் கொள்கைகள் பாகிஸ்தானின் கொள்கைகளில் இருந்து வேறுபட்டதல்ல. அதனால்தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் பாகிஸ்தானின் கொள்கையை எதிரொலிக்கிறார்கள் என பிரதமர் மோடி பஞ்சாபில் பிரசாரம் செய்தார்.

ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து பிரசாரம் செய்கையில், காங்கிரஸ் கட்சியினர் ஒரு போதும் தீவிரவாதிகள் வீட்டுக்கு செல்வதில்லை. ஆனால் ஆம் ஆத்மி சின்னத்தை சுட்டிக்காட்டி, அதன் தலைவர் காலிஸ்தான் தலைவர் வீட்டுக்கு செல்வார் என கெஜ்ரிவாலை மறைமுகமாகப் பேசி பிரசாரம் செய்தார். காங்கிரஸ் மற்றும் பாஜக என இரண்டு பெரிய கட்சிகளும் ஆம் ஆத்மி மீது இந்த குற்றச்சாட்டை வைத்து தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன.

குமார் விஸ்வாஸ்
ஆம் ஆத்மி மீது இந்த குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதற்கு காரணம் குமார் விஸ்வாஸ். இவர் ஆம் ஆத்மி நிறுவனர்களில் ஒருவர். பின்னர் அங்கிருந்து விலகி, பாஜக-வில் இணைந்தார். பஞ்சாப் தேர்தல் நடைபெறும் நேரத்தில், அவர் பேசிய வீடியோவை பாஜக தற்போது வெளியிட்டுள்ளது. அதில், ''அரவிந்த் கெஜ்ரிவால் ஒருமுறை என்னிடம், 'ஒருநாள் நான் பஞ்சாப் முதல்வராக வேண்டும் அல்லது காலிஸ்தானின் பிரதமராக வருவேன்' என கூறியிருக்கிறார்.

கெஜ்ரிவால் விளக்கம்
காலிஸ்தான் சர்ச்சை குறித்து டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று விளக்கமளித்துள்ளார். அதில், ''பஞ்சாபில் நாங்கள் தவிர்க்க முடியாத சக்தியாக வருகிறோம். இதை பிடிக்காதவர்கள் குழுவாக சேர்ந்து என்னை பயங்கரவாதி என்கிறார்கள். இது காமெடியான ஒன்று. பயங்கரவாதி என்றால் பிரதமர் மோடி ஏன் என்னை கைது செய்யவில்லை.

இனிமையான பயங்கரவாதி
இவர்கள் என்னை பயங்கரவாதி என்கிறார்கள், அப்படி என்றால் நான் தான் இந்த உலகின் இனிமையான பயங்கரவாதியாக இருக்க வேண்டும். பள்ளிகள், மருத்துவமனைகள், மின்சாரம், சாலைகள், தண்ணீர் போன்றவற்றை மக்களுக்கு வழங்கும் பயங்கரவாதியாக இருக்க வேண்டும். ராகுல் காந்தி முதலில் என்னை பயங்கரவாதி என்றார், அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, பிரியங்கா காந்தி என வரிசைகட்டி என்னை பயங்கரவாதி என்று அழைப்பது சிரிப்பாக இருக்கிறது.

பகத்சிங்
பயங்கரவாதிகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று மக்களிடையே அச்சத்தை பரப்புகிறது, மற்றொன்று ஊழல்வாதிகள் மத்தியில் அச்சத்தை பரப்புகிறது. இன்று அனைத்து ஊழல்வாதிகளும் எனக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர். அவர்கள் தூக்கம் தொலைந்துவிட்டது. 100 ஆண்டுகளுக்கு முன்பு பகத் சிங் பயங்கரவாதி என்று அழைக்கப்பட்டார். இப்போது 100 ஆண்டுகளுக்குப் பிறகு பகத்சிங்கைப் பின்பற்றுபவரை பயங்கரவாதி என்று அழைக்கிறார்கள்'' என்று அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications