ஹரியானாவில் திடீர் பரபரப்பு..பசுவுடன் போலீஸ்நிலையத்தில் விவசாயிகள் முற்றுகை..டெல்லி நோக்கியும் பேரணி
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் தொடங்கிய போராட்டம் தற்போது வரை முடியவில்லை.
மூன்று சட்டங்களும் திரும்பப் பெறும் வரை போராட்டத்தைத் திரும்பப் பெறப்போவதில்லை என்பதை விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
செத்தவங்க திரும்பி வரவா போறாங்க.. ஹரியானா முதல்வரின் அதிர்ச்சிப் பேச்சு!
ஹரியானாவில் போராட்டம்
பஞ்சாப் & ஹரியானா மாநிலங்களிலும் தொடர்ச்சியாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு ஆளும் ஜேஜேபி-பாஜக கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுநிகழ்ச்சிகளில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி கடந்த ஜூன் 1ஆம் தேதி ஜேஜேபி எம்எல்ஏ தேவேந்தர் பாப்லி கலந்து கொண்ட போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. அதில் ஜேஜேபி எம்எல்ஏ தேவேந்தர் பாப்லியின் உதவியாளருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது.
2 விவசாயிகள் விடுதலை செய்யப்படவில்லை
இருப்பினும், தன் மீதும் தனது உதவியாளர் மீதும் தாக்குதல் நடத்தியவர்களை மன்னிப்பதாக தேவேந்தர் பாப்லி தெரிவித்தார். இதையடுத்து தாக்குதல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட 2 எஃப்ஐஆர்கள் திரும்பப் பெறப்பட்டன. ஆனால், அதேநேரம், தேவேந்தர் பாப்லியின் வீட்டின் முன் போராட்டம் நடத்தியதாக புதிய எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 27 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவரை மட்டும் தற்போது வரை விடுதலை செய்யப்படவில்லை.
பசுவுடன் போராட்டம்
இந்நிலையில், அந்த 2 விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதில் ஒரு விவசாயி தன்னுடன் பசுவையும் அழைத்துச் சென்றுவிட்டார். வீட்டில் பசுவைப் பார்த்துக் கொள்ள யாரும் இல்லை என்பதால் கையுடன் கூட்டி வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் டிக்கைட் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். சனிக்கிழமை இரவு முழுவதும் போலீஸ் நிலையத்திலேயே போராட்டக்காரர்கள் இருந்தனர்.
உடன்பாடு இல்லை
இது தொடர்பாக நேற்று மாவட்ட நிர்வாகத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். இருப்பினும், கைது செய்யப்பட்டவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் இருப்பதாகவும் இது தொடர்பாக விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்றும் அம்மாநில உள் துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார். நிலைமை மோசமாதவைத் தடுக்க அங்கு 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் டெல்லியை நோக்கி பேரணி
இந்தச் சூழலில், மறுபுறம் பாரதிய கிசான் யூனியன் (சாருனி) தலைவர் குர்ணம் சிங் சாருனி தலைமையில் விவசாயிகள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் எல்லையிலிருந்து டெல்லிக்கு முற்றுகையிட்டு பேரணி நடத்தினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்தப் பேரணி காரணமாக NH 44 சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் வரும் ஜூன் 10ஆம் தேதி 2,500 வாகனங்களுடன் மிகப் பெரியளவில் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.