பஞ்சாப் தேர்தல்.. மீண்டும் டிக் செய்யப்பட்ட சரண்ஜித் சிங்.. - ராகுல் போடும் மனக்கணக்கு இதுதான்!
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில், தலித் சீக்கிய ஓட்டுகளைக் குறிவைக்கும் விதமாக, காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியைத் தேர்வு செய்திருக்கிறார் ராகுல் காந்தி.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 10ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
177 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பஞ்சாப்
பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன. இந்த தேர்தலில் பஞ்சாப் காங்கிரஸூக்கு ஆம் ஆத்மி பலத்த போட்டியைக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

முதல்வர் வேட்பாளர்
இன்று பஞ்சாபில் நடைபெற்ற டிஜிட்டல் பேரணியில், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதனால் சரண்ஜித் சிங் தொண்டர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அதேசமயம், மீண்டும் சீட் மறுக்கப்பட்டிருப்பதால் நவ்ஜோத் சிங் சித்து தொண்டர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.

சரண்ஜித் சிங் சன்னி
தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், மிகுந்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வாகி இருக்கிறார். இதற்கு காரணம் சரண்ஜித் தலித் என்று சொல்லப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் 32 சதவிகிதம் மக்கள் தலித். அவர்களின் வாக்கு வங்கியை மொத்தமாக பெறவே, தலித் சீக்கியரை முதல்வர் வேட்பாளராக ராகுல் காந்தி களமிறக்கியுள்ளார். கடந்த தேர்தலை விட அதிக தலித் வாக்குகளைப் பெறவே இந்தத் திட்டம் என்று தெரியவருகிறது.

மாற்றம்
கடந்த சில தினங்களுக்கு முன்புதான், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபேந்திர சிங் ஹனி, சட்டவிரோத மணல் கடத்தல் வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார். சரண்ஜித் சிங்கின் சகோதரர், சுயேட்சையாக போட்டியிடுகிறார் என சரண்ஜித் சிங்குக்கு எதிராக பல விஷயங்கள் எழுந்தன. இதனால் பஞ்சாப் காங்கிரஸில் மாற்றம் ஏற்பட்டு, நவ்ஜோத் சிங் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக மீண்டும் சரண்ஜித் சிங்கையே கைகாட்டி இருக்கிறார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications