கடைசி பட்ஜெட்.. விவசாயிகளுக்கு அள்ளிக்கொடுக்கும் பஞ்சாப் அரசு.. ரூ 1,186 கோடி விவசாய கடன் தள்ளுபடி
சண்டிகர்: சுமார் 1.13 லட்சம் விவசாயிகளின் 1,186 கோடி ரூபாய் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யப்படுவதாகப் பஞ்சாப் அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பெரும்பாலான விவசாயிகள் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகும்.
விவசாயிகளின் போராட்டத்திற்குப் பஞ்சாப் அரசு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது. இந்நிலையில், 2021-22ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை அம்மாநிலத்தின் நிதி அமைச்சர் மன்பிரீத் சிங் பாடல் பஞ்சாப் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். இதில் விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட வேளாண் துறையில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
சுமார் 1.13 லட்சம் விவசாயிகளின் 1,186 கோடி ரூபாய் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அமைச்சர் மன்பிரீத் சிங் பாடல் அறிவித்தார். மேலும், நிலமற்ற விவசாயிகளுக்கு 526 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
டெல்லி நோக்கி புறப்படும்.. 40000 பெண் விவசாயிகள்.. சர்வதேச மகளிர் தினத்தில் போராட்டம்!
சுமார் 1,68,015 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களும் அறிவிப்புகளும் இதில் இடம் பெற்றிருந்தது. சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அளிக்கப்படும் மாத ஓய்வூதியத்தை ஏப்ரல் 1 முதல் ரூ.7,500இல் இருந்து ரூ.9,400 ஆக உயர்த்துவதாகவும் அவர் அறிவித்தார். இதேபோல முதியோர் ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.750இல் இருந்து ரூ.1,500ஆக உயர்த்தப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.
அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இதுவாகும். ஏனென்றால், பஞ்சாப் மாநிலத்தில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.