சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங்
சண்டிகர்: மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு வழக்கு தொடரும் என்று அம்மாநில முதல்வர் அமரீந்தர்சிங் அறிவித்துள்ளார்.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் சி.ஏ.ஏ., அரசியல் சாசனத்துக்கு எதிரானது; ஆகையால் அதனை திரும்பப் பெற வேண்டும் என்று பஞ்சாப் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் அமரீந்தர்சிங் கூறியதாவது:
குடியுரிமை சட்ட திருத்தத்தில் திருத்தங்கள் தேவை என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்தினோம். அனைத்து தரப்பும் ஏற்கும் வகையில் குடியுரிமை சட்ட திருத்தம் இருக்க வேண்டும் என்பதற்காக இதனை வலியுறுத்தினோம்.
ஆனால் மத்திய அரசு ஏற்கவில்லை. இதனையடுத்து இச்சட்ட திருத்தத்தை திரும்பப் பெற கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
மேலும் கேரளா அரசைப் போல உச்சநீதிமன்றத்தில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக வழக்கு தொடரப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பானது பஞ்சாப் மாநிலத்தில் பழைய நடைமுறைகளின்படிதான் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமரீந்தர்சிங் கூறினார்.












Click it and Unblock the Notifications