5 சவரனுக்கு கீழ் நகைக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு 100% நகைக் கடன் தள்ளுபடி - ஐ.பெரியசாமி
100% நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு 100% நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி 14 லட்சத்து 40,000 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதன் காரணமாக தகுதியான நபர்களை கண்டறிவதற்காக நகை கடன் பெற்றவர்களின் பெயர் ,கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண் குடும்ப அட்டை எண்,ஆதார் எண், முகவரி ,அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான ஆய்வு செய்யப்பட்டன.
2021ஆம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்கள், குடும்ப அட்டையின் படி இடம்பெற்றுள்ள குடும்பத்தினர் நகை கடன் தொகை முழுமையாக செலுத்தியவர்கள், 40 கிராமுக்கு மேற்பட்ட நகை கடன் பெற்ற குடும்பத்தினருக்கு தள்ளுபடி செய்யப்படாது என அறிவிக்கப்பட்டது.
40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்றவர்கள், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்,குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள், ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள், எந்த பொருளும் வேண்டாத குடும்பத்தினர், ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கு கூடுதலாக பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோருக்கு நகைக்கடன் தள்ளுப்படி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
அய்யா.. மாசம் 1000 ரூபாய்! டைம் ஆச்சு வெளிய போகனும்.. திடீர் கேள்வியால் நழுவிய அமைச்சர் ஐ.பெரியசாமி!
நகைக் கடன் தள்ளுபடி அரசாணையில் குறிப்பிடப்பட்ட தகுதி வாய்ந்த பயனாளிக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகளை தோ்வு செய்து, அவா்கள் அடமானம் வைத்த நகை மற்றும் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடமானம் வைத்தவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்துள்ளார். 14 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றார்.