12 மணி நேரம் வேலை! 4 நாள் வேலை பார்த்துவிட்டு 3 நாள் லீவில் ஊருக்கு போகலாம்! ஈஸ்வரன் தரும் விளக்கம்!
சென்னை: வேலைநேரம் குறித்த புதிய சட்டவரைவின் படி வாரத்திற்கு 4 நாட்கள் வேலை பார்த்துவிட்டு மீதி 3 நாட்கள் சம்பளத்தோடு சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தோடு இருக்கலாம் என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு விவரம் வருமாறு;

தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தால் தொழிலாளரகள் தினசரி 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்ற தவறான கருத்து பரப்பப்படுகிறது. சட்டப்படி ஒரு வாரத்தில் மிகை நேரத்தையும் சேர்த்து 60 மணி நேரத்திற்கு மேல் வேலை பார்க்க முடியாது என்பது சட்டம்.
ஒரு தொழிற்சாலையில் நாளை உற்பத்தியை முடிக்க வேண்டும் என்ற நிலையில் இன்று ஒரு 4 மணி நேரம் வேலை பார்த்தாக வேண்டும் என்ற நிலை வரும் போது தேவைக்கேற்ப எவ்வளவு பேர் வேலை பார்க்க வேண்டுமோ அவர்கள் 12 மணி நேரம் வேலை பார்ப்பார்கள்.
அதற்கு இந்த சட்ட திருத்தம் வழிவகுக்கிறது. வாரத்தில் நான்கு நாட்கள் வேலை பார்த்துவிட்டு மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்வது ஒரு உதாரணத்திற்கு சொல்வது. ஒரு தொழிற்சாலையில் 1000 பேர் வேலை பார்க்கிறார்கள் என்றால் இன்றைக்கு ஒரு 100 பேர் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். நாளைக்கு வேறு 100 பேர் அதிக நேரம் வேலை பார்க்க தேவை ஏற்படலாம்.
பக்கத்து ஊர்களில் இருந்து வந்து தங்கி வேலை பார்த்து ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு சென்று திங்கள்கிழமை மறுபடியும் வேலைக்கு வர வேண்டும் என்ற நிலையில்லாமல் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை பார்த்துவிட்டு மீதி மூன்று நாட்கள் சம்பளத்தோடு விடுமுறை பெற்று சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தோடு இருக்க வாய்ப்பு இருக்கிறது.
சென்ற ஆட்சியில் 50 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர நொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன என்பதை அறிவோம். மேலும் தொழிற்சாலைகள் மூடப்படக்கூடாது என்பதை உறுதி செய்ய வேலை நேரத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
தொழிற்சாலைகள் மூடப்பட்டால் வேலையிழப்புகள் ஏற்படும். புதிய தொழிற்சாலைகள் வரவேண்டும் அதே சமயத்தில் இயங்குகிற தொழிற்சாலைகளும் பாதுகாக்கப்படவேண்டும். இந்த திருத்தத்தின் மூலம் பல நடைமுறை சிக்கல்கள் தீர்க்கப்படும்.
கீழ் கண்ட மாநிலங்களில் புதிய திருத்தப்பட்ட தொழிலாளர் வேலை நேர சட்டம் அமலில் உள்ளது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய எல்லா மாநிலங்களுமே இதை அமல் படுத்தி விடுவார்கள். நாம் செய்யவில்லையென்றால் பாதிக்கப்படுவோம்.
இங்கிருக்கிற தொழிற்சாலைகள் அங்கு சென்ற பின்னால் வேலையில்லா திண்டாட்டம் பெருகிவிடும். பிற்காலத்தில் புலம்பிப் பயன் இல்லை. ராஜஸ்தான், மேற்கு வங்கம் கூட சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டது. 1 வருடம் செயல்படுத்தி சாதக பாதகங்களை பார்க்கலாம்.
புதிய சட்ட திருத்தத்தால் தொழிலாளர்கள் சுரண்டப்படுவார்கள் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இதனை நிறைவேற்றாவிட்டால் தொழில் வளர்ச்சியில் நாம் பின் தங்கி விடுவோம். இங்குள்ள தொழிற்சாலைகள் வேறு இடத்திற்கு புலம் பெயரும் ஆபத்தும் உள்ளது.
இந்த சட்ட திருத்தம் அடித்தட்டு மக்களின் பாதுகாப்பிற்கும், பொருளாதார முன்னேற்றததிற்கும் வழிவகுக்கும் என்பதால் தொழிற்சங்கங்கள் இதனை புரிந்து கொண்டு தமிழக அரசின் வேலை நேர சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தரவேண்டும்.












Click it and Unblock the Notifications