திடுக்கிட வைத்த ராமஜெயம் கொலை வழக்கு! சந்தேக நபர்கள் துன்புறுத்தலா? ஆஜர்படுத்தப்பட்ட டாப் ரவுடிகள்!
திருச்சி : ராமஜெயம் கொலை வழக்கில் பிரபல ரவுடிகள் 12 பேர் மீது உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக திருச்சி சிபிசிஐடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அனைவரும் விரைவில் பெங்களூரில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது.
திருச்சி மாவட்ட திமுக முக்கிய பிரமுகரும், கழக தலைமை நிலைய செயலரும் , தற்போதைய நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியான தொழிலதிபர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
கல்லணை சாலையில் உள்ள காவிரிக் கரையோரம், கை, கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலை நடந்து கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

ராமஜெயம் கொலை வழக்கு
இந்நிலையில் ராமஜெயம் கொலை வழக்கை தற்போது சிறப்பு புலனாய்வு குழு போலீசார் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே வழக்கு தொடர்பாக சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். விசாரணைக்காக அழைத்து செல்லும் நபர்களை துன்புறுத்துவதாக, சிறை கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநர் வழக்கறிஞர் புகழேந்தி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்தார். அதில் இந்த குழு சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பதை கண்காணித்து மனித உரிமை மீறலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

டிஜிபி ஷகில் அக்தர்
இதற்கு இடையே தமிழக போலிசார் டிஜிபி உத்தரவின் பெயரில் தமிழகம் முழுவதும் பிரபல ரவுடிகளில் முக்கியமான ரவுடிகளிடம் நெருக்கமான முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கில் இது வரை விசாரணை செய்ததில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உள்ள 20 நபர்கள் கடந்த நில நாட்களுக்கு முன்பு திருச்சியில் டிஜிபி ஷகில் அக்தர் முன்பு ஆஜராகினர். அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது.

நீதிமன்றத்தில் ஆஜர்
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பிரபல ரவுடிகள் சாமிரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து , சீர்காழி சத்தியராஜ், தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவகுணசேகரன், சுரேந்தர், மயிலாடுதுறை கலைவாணன் என 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்யப்படுகிறது. இவர்கள் அனைவரும் இன்று திருச்சி நீதிமன்றத்தில் உள்ள சிபிசிஐடி நீதிமன்றத்தில் ஆஜர் ஆக உத்தரவிடப்பட்டது.

பரபரப்பான கட்டம்
அதன்படி இன்று இவர்கள் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர். அனைவரும் JM6ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் அனைவரும் ஆஜராகினர். சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் மதன் மற்றும் அதிகாரிகள் விசாரணையை கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் அனைவரும் விரைவில் பெங்களூரில் உள்ள உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications