குவிந்த அரசு ஊழியர்கள்.. மொத்தமாக களம் இறங்கும் 14,000 வருவாய்த்துறை அலுவலர்கள்.. பறந்த கோரிக்கை
சென்னை: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் முருகையன் இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் வளாகத்தில் வருவாய்த்துறை ஆணையரை சந்தித்து மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஜூலை 3ஆம் தேதி வியாழனன்று மாநிலம் முழுவதும் 14,000 வருவாய்த்துறை அலுவலர்கள் ஒட்டு மொத்தமாக தற்செயல் விடுப்பு எடுத்து, அனைத்து பணிகளையும் புறக்கணிப்போம் என்று கூறினார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் வளாகத்தில் வருவாய்த்துறை ஆணையரை சந்தித்து மனு அளிப்பதற்கான பெருந்திரள் முறையீடு போராட்டத்தினை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் இன்று நடத்தியது. இந்த போராட்டம் குறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் முருகையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு கட்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்தோம் .எங்களது 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 38 மாவட்ட நிர்வாகிகள் இன்று போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளோம்.

கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் வருவாய்த்துறை அரசு செயலாளரிடம் மனு அளிக்கிறோம். ஆனால் அதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஜூலை 3ஆம் தேதி வியாழனன்று மாநிலம் முழுவதும் 14,000 வருவாய்த்துறை அலுவலர்கள் ஒட்டு மொத்தமாக தற்செயல் விடுப்பு எடுக்க போகிறோம். அன்று அனைத்து பணிகளையும் புறக்கணிப்பு செய்து, மாவட்ட தலைநகரில் இரவு பகலாக 24 மணி நேர தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதனால் வருவாய்த்துறை அலுவலகங்கள் செயல்பாடுகள் இன்றி முடங்கும் அபாயம் உள்ளது.
எனவே எங்கள்கோரிகையான தமிழக அரசு ஏற்கனவே ஒப்புதல் செய்யப்பட்ட 564 அலுவலக உதவியாளர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட காலியிடங்களை நிரப்பிட அரசு உடன் ஒப்புதல் அளிக்க வேண்டும். பேரிடர் மேலாண்மைப் பிரிவில் கலைக்கப்பட்ட 97 காலியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும். வருவாய்த் துறையில் அனைத்து பணிகளுக்கும் போதிய கால அவகாசம் வழங்காமல் அவசரகதியில், மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வதை கைவிட வேண்டும். இணைய வசதி, கணினி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
அரசுத் துறைகளில் கருணை அடிப்படை நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதவீதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து, மீண்டும் 25 சதவீதமாக வழங்க வேண்டும். கருணை அடிப்படை நியமனத்திற்கான வருவாய் நிர்வாக ஆணையர் அனுப்பியுள்ள பரிந்துரையை அரசு ஏற்க வேண்டும்.
வருவாய்த்துறை அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிப்பளுவைக் கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும்.
இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோருக்கிடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்திட மனிதவள மேலாண்மைத்துறை மூலமாக உரிய தெளிவுரை வழங்கிட வேண்டும். அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய நில எடுப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பளிப்பு செய்யப்பட்ட 22 துணை ஆட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும். மேற்கண்ட 9 கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.












Click it and Unblock the Notifications