கிளாம்பாக்கத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த 16 வயது சிறுமி கடத்தல்! ஆட்டோவில் இருந்த மூவர் யார்?
சென்னை: சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த 16 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்த முயன்றவர்களை போலீஸார் துரத்திச் சென்ற போது சிறுமியை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு அந்த மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் சேலத்தில் இருந்து சென்னை வந்ததாக தெரிகிறது. இரவு 11 மணிக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரே மாதவரம் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர், அந்த சிறுமியை வலுகட்டாயமாக கடத்தினாராம். மேலும் சிறிது தூரத்தில் அதே ஆட்டோவில் வேறு இருவரும் ஏறி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் சிறுமி சப்தம் போட்டதை அடுத்து சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் அந்த ஆட்டோவை பின்தொடர்ந்தனர். அதற்குள் சிறுமியை கோயம்பேடு பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு ஆட்டோவில் வந்த மூவரும் தப்பியோடிவிட்டனர்.
சிறுமியை மீட்ட காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பியோடிய மூவரையும் சிசிடிவி கேமரா உதவியுடன் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications