முதல்வர் கவனத்திற்கு போன "ஆதங்கம்.." "டபுள் மகிழ்ச்சி" தர காத்திருக்கும் ஸ்டாலின்.. என்ன தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் மாநகர் பகுதியில் உள்ள காவல்துறையினர் வெளியிட்ட ஆதங்கத்தை கருத்தில் கொண்டு காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளாராம்.
இதன்மூலம் குற்றத்தை முற்றிலும் தடுக்கமுடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக காவல் துறையில் மாநகர் பகுதியில், சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு ஒரு துணை கமிஷனரும், குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு ஒரு துணை கமிஷனரும் இருந்தனர்.
இதில் சட்டம்- ஒழுங்கு பிரிவு துணை கமிஷனருக்கு இருக்கும் மரியாதை குற்றப்பிரிவு துணை கமிஷனர்களுக்கு இல்லை என்ற குறை இருந்து வந்தது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இரண்டாக பிரித்து
இதையடுத்து மாநகர காவல்துறையை இரண்டாக பிரித்து அப்பகுதியில் இருக்கும் சட்டம் ஒழுங்கு, குற்றம் மற்றும் போக்குவரத்தை ஒரே அதிகாரி கவனிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தார். இதனால் போலீஸ் அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே போல சேலம் மாநகரில் தெற்கு, வடக்கு என இரண்டாக பிரிக்கப்பட்டது.

நியமனம்
இந்நிலையில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசனிலும் குற்றப்பிரிவுக்கென தனியாக இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படவுள்ளனர். சென்னை, கோவை போன்ற மாநகரில் ஒரு ஸ்டேசனில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு பிரிவுக்கென தனித்தனியாக இன்ஸ்பெக்டர்கள் இருக்கிறார்கள்.

இன்ஸ்பெக்டர்கள்
அதே போல மீதமுள்ள மாநகரிலும் ஒரு ஸ்டேசனுக்கு 2 இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதன்படி சேலம் மாநகரில் உள்ள ஸ்டேசன்களுக்கும் விரைவில் 2 இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இதற்கான உத்தரவு விரைவில் வருகிறது.

2 இன்ஸ்பெக்டர்கள்
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசனுக்கும் 2 இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படுவதால் குற்றத்தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். கண்டுபிடிக்க முடியாத வழக்குகளில் அதிக கவனம் செலுத்தி குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். குற்றவழக்குகள் நீதிமன்றங்களில் விரைவுபடுத்தப்படும்,' என்றனர்.

மனம் குளிரும்
அண்மைக்காலமாக தமிழக காவல் துறையில் காவலர்களின் மனம் குளிரும் வகையில் நல்லதொரு மாற்றங்கள் நடைபெறுகின்றன. வார ஓய்வு, பெண் காவலர்கள் சாலைகளில் காத்திருக்கும் பணியிலிருந்து விலக்கு, காவல் துறை மானியக் கோரிக்கையில் வந்த சலுகைகள் உள்ளிட்ட அறிவிப்புகளால் காவல் துறையினர் கொஞ்சம் நிம்மதி பெரூமூச்சுவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications