புத்துயிர் பாயுது.. இன்று மேட்டூர் அணையில் டெல்டா மாவட்டங்களுக்கு நீர் திறப்பு! விவசாயிகள் ஆறுதல்
சென்னை: சம்பா பயிர்களைக் காத்திட டெல்டா மாவட்டங்களுக்கு இன்று முதல் 2 டிஎம்சி தண்ணீர் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட உள்ளது.
வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைந்ததாலும், காவிரி நதி நீர்ப் பற்றாக்குறை காரணமாக டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் போதிய நீர் இல்லாமல் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். தங்களின் துயர் துடைக்க மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அடுத்து டெல்டா மாவட்டங்களில் சம்பா நெற்பயிர் நிலையை அறிய தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில். கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டது.

இந்த குழுக்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் மொத்தம் 22,774 ஏக்கர் சம்பா நெற் பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டு உள்ளது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப் பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதி நீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயப் பெருமக்களிடமிருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை கிடைக்கப் பெற்றதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4,715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18,059 ஏக்கரும், என மொத்தம் 22,774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது. எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு TMC தண்ணீரை 03.02.2024 முதல் திறந்துவிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். எனவே, விவசாயப் பெருமக்கள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications