210 ஆர்டர்லிகளை திரும்பப்பெற்றது காவல்துறை! உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அதிரடி நடவடிக்கை!
சென்னை: போலீஸ் உயரதிகாரிகள் வீடுகளில் இருந்து 210 ஆர்டர்லிகளை திரும்பப் பெற்றுக்கொண்டது தமிழக காவல்துறை.
அண்மையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி காவல்துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
210 ஆர்டர்லிகளில் இன்னும் 150 பேர் தங்கள் காவல் பணிக்கும் திரும்பவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விவரம் வருமாறு;
வழக்கு விசாரணை
2014 -ஆம் ஆண்டில் மாணிக்கவேல் என்பவரை காவலர் குடியிருப்பை காலி செய்யுமாறு உத்தரவிட்டும், அதை உயர் நீதிமன்றம் உறுதி செய்த பிறகும், இந்த ஆண்டு தான் இடத்தை காலி செய்திருப்பதாகவும், அதன் காரணமாக அவர் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்து வருகிறார். அந்த வழக்கு கடந்த ஜூன் 21-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆர்டர்லி முறை குறித்து உடனடியாக கவனத்தில் கொள்ளும்படி தமிழக டிஜிபிக்கு உள்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆர்டர்லிகள் வேண்டாம்
அப்போது அறிவுறுத்திய நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், முறையாக ஓராண்டு பயிற்சி முடித்து 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் காவலர்களை உயர் அதிகாரிகள் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றம் எனக் கூறினார். மேலும், படித்தொகையை பெற்றுக்கொண்டு வீட்டு உதவியாளர்களை வேண்டுமானால் நியமித்துக் கொள்ளலாம் என்றும் ஆர்டர்லிக்களை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கடுமை காட்டினார்.
காவல்துறை துறை அதிரடி
இந்தச் சூழலில் இது தொடர்பாக அடுத்த வழக்கு விசாரணை இம்மாதம் 25-ஆம் தேதி வரவுள்ளது. ஆனால் அதற்குள்ளாக ஆர்டர்லிகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது தமிழக காவல்துறை. அந்தவகையில் இதுவரை 210 ஆர்டர்லிகள் திரும்பப் பெறவட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டர்லி பணிகளில் இருந்து திரும்பப்பெறப்பட்ட 210 காவலர்களில் 150 பேர் இன்னும் தங்கள் காவல் பணிக்கு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாள்
ஆர்டர்லி முறை ஒழிப்பு தொடர்பாக தமிழகத்தில் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்தது. இப்போது சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலால் ஒரு வழியாக இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.