சிறுமி டான்யா நினைவிருக்கா? ஸ்டாலினால் மாறிய முகம் - 2ம் கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு
சென்னை: முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துரித நடவடிக்கையால் முதற்கட்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிறுமி டான்யா குணமடைந்த நிலையில் மருத்துவர்கள் பரிந்துரையின்படி இன்று இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வெற்றிகரமாக நிறைவடைந்து உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மோரூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி சௌபாக்யா. இந்த தம்பதியின் 9 வயது மகளான டான்யா அரியவகை முக சிதைவு நோயில் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிறக்கும் போது அனைவரையும் போல சாதாரணமாக இருந்துள்ளார் டான்யா. அவர்களுக்கு மூன்றரை வயதில் முகத்தில் கரும்புள்ளி ஒன்று தோன்றி இருக்கிறது.

முக சிதைவு நோய்
இதனை சாதாரண ரத்தக்கட்டி என்று நினைத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார் டான்யா. ஆனாலும், அவருக்கு பாதிப்பு குறையவில்லை. ஆறு ஆண்டுகளாக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கி சிகிச்சை பெற்றும் பாதிப்பு குறையவில்லை. மாறாக சிறுமியின் ஒருபக்க முகம் சிதைவு மேலும் அதிகரிக்கத் தொடங்கி பாதிப்பு தீவிரம் அடைந்தது.

ஒதுக்கப்பட்ட டான்யா
நாட்கள் செல்ல செல்ல டான்யாவின் முகம், வலது கன்னம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதும் சிதைடைய தொடங்கி உள்ளது. இதனால் குழந்தை டான்யாவின் அழகிய முகம் மிகவும் பாதிப்படைந்தது. உடன் பயிலும் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கி அன்பை புகட்ட வேண்டிய ஆசிரியர்களும் டான்யாவை அவருக்கு இருக்கும் குறைபாடுகளை காரணம் காட்டி வெறுத்து ஒதுக்கி தனிமைப்படுத்தி உள்ளனர்.

முதலமைச்சரிடம் கோரிக்கை
சிறுமிக்கு தொடர் சிகிச்சை அளித்தும் குணமடையாததால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக அறுவை சிகிச்சை செய்ய உதவி செய்ய வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். முகத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தின் காரணமாக அவர் பள்ளி படிப்பை முழுவதுமாக பாதித்துள்ளது. முதலமைச்சரின் கவனத்திற்கும் இது கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

முதற்கட்ட அறுவை சிகிச்சை
இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் சிறுமி டான்யாவுக்கு தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் கடந்த அகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முழு சிகிச்சையையும் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டணமின்றி செய்வதற்கும் உத்தரவாதம் அளித்தது.

வெற்றிகரமான சிகிச்சை
முதற்கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சிறுமி டானியாவை சந்தித்து ஆறுதல் கூறி இருந்தார். முகச்சிதைவு நோயிலிருந்து தன்னை காப்பற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிறுமி மற்றும் பெற்றோர் நன்றி தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் மருத்துவரின் பரிந்துரையின் படி சிறுமியின் முகம், வாய், தொண்டை குழாய், பகுதிகள் இயல்பு நிலைக்கு வர தொடர் சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட உள்ளன.

இரண்டாம் கட்ட சிகிச்சை
இதற்கான இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை இன்று தண்டலம் சவிதா மருத்துவமனையில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அறுவை சிகிச்சை அறைக்கு செல்லும் சிறுமியை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து விரைவில் குணமடைய வாழ்த்தி தைரியம் அளித்து அறுவை சிகிச்சை அறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் 2ம் கட்ட அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications