பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. மேலும் 3 பேரை தூக்கிய தனிப்படை போலீஸ்
சென்னை: தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52). சென்னை பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் இவரது பழைய வீடு இருந்தது. இதை இடித்து தற்போது இவர் புது வீடு கட்டி வந்தார். வழக்கமாக மாலை நேரத்தில் இங்கு தான் நிற்பார்.

வீட்டு கட்டுமான பணிகள் குறித்தும், நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருப்பார். அப்படித்தான் நேற்று மாலையும் ஆம்ஸ்ட்ராங் வீட்டு முன்பு நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு உணவு டெலிவரி செய்பவர்கள் போல உடையணிந்து வந்த மர்ம கும்பலினர் திடீரென ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
கண் மூடி திறப்பதற்குள் ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார். அவருடன் நின்று பேசிக்கொண்டிருந்தவர்களுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். எனினும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் மாநில கட்சி தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், முதலில் சம்பவம் நடந்த 4 மணி நேரத்திற்குள் சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரணடைந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அவர்கள் 8 பேரும் காவல் நிலையத்தில் வந்து ஆஜராகவில்லை. காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் தான் என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் ஆம்ஸ்ட்ராங்கை ஏன் கொலை செய்தனர், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் மேலும் 3 பேர் சரணடைந்துள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கோலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே பிரேத பரிசோதனை முடிந்து ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் பழைய வீட்டிற்கு அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது.
இறுதி அஞ்சலி நாளை நடக்கிறது. இதற்காக நாளை காலை சென்னை பெரம்பூருக்கு ஆம்ஸ்ட்ராங் உடல் கொண்டு செல்லப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் சென்னை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் தான் ஆம்ஸ்ட்ராங் உடலை தகனம் செய்ய கோரி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கட்சி அலுவலகத்தில் தகனம் செய்ய அனுமதி கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்காக ஏற்கப்பட்டது. தொடர்ந்து நாளை இந்த மனு மீதான விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications