சென்னையை நெருங்கிய மாண்டஸ்! வேலைய காட்ட ஆரம்பிச்சுருச்சே! காத்து அடிக்கலைனாலும் வெளியே வராதீங்க!
சென்னை : மாண்டஸ் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியுள்ள நிலையில், மாமல்லபுரத்திற்கு 30 கி.மீ. தொலைவில் மாண்டஸ் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றின் வேகம் குறைந்தாலும் மக்கள் வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மாண்டஸ் புயலின் மையப்பகுதி நீண்ட நேரமாக கடலில் மையம் கொண்டிருந்த நிலையில் தற்போது அதன் மையப்பகுதி மெல்ல மெல்ல கரையை கடக்க துவங்கியிருக்கிறது. இதனால் மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரிய அளவில் காற்றின் வேகம் அதிகரித்து இருக்கிறது.
தற்போதைய சூழலில் சென்னையிலிருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் மான்டஸ் புயல் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
மாண்டஸ் புயல்
தற்போது 12 கிலோமீட்டர் வேகத்தில் புயல் ஆனது கரையை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் காற்றின் வேகம் அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக சென்னை காசிமேடு தொடங்கி மாமல்லபுரம் வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகமானது கணிசமாக அதிகரித்திருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் சுமார் 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வரும் நிலையில் கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் கடற்கரையோர பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
முக்கிய எச்சரிக்கை
போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதாவது புயலின் கண் பகுதி என அழைக்கப்படும் மையப்பகுதி கரையை கடக்கும் போது பெரிய அளவில் காற்றில் சலனம் இருக்காது. இதனால் புயல் முடிந்து விட்டது என எண்ணி பொதுமக்கள் வெளியே வரக்கூடாது. புயலின் பின்பகுதி கரையை கடக்கும் போது அதிகாலை வரை பலத்த காற்று மற்றும் மழை பொழிய வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
சேதம்
தற்போது பலத்த காற்று காரணமாக சென்னையின் பல பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனங்கள் கார்கள் போன்றவற்றை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைப்பது நல்லது, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் நீர் உள்ளே புகுந்திருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். சென்னை காசிமேடு பகுதியில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுவதால் மீன்பிடி தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் படகுகளை கயிறு கட்டி இழுத்து பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.
காற்றின் வேகம்
புயலின் மையப்பகுதி நெருங்க நெருங்க காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனால் மரங்கள் முறிந்து விழும் சாயவும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மின்வெட்டு காரணமாக தொலைக்காட்சிகளில் புயலில் பாதிப்பு குறித்து அறிய முடியவில்லை என்றாலும் செல்போன்களிலும் வானொலியிலும் புயல் நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். குறிப்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் போலி செய்திகளை நம்பி பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
போக்குவரத்து நிறுத்தம்
தற்போதைய சூழலில் புயலின் மையப்பகுதி கடக்க இருக்கும் நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 11 மணிக்கு மேல் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. தமிழக அரசின் போக்குவரத்து கழகங்கள் மூலம் 550 பேருந்துகள் 11 மணிக்கு மேலே இயக்கப்படும் நிலையில் தற்போது புயல் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் அதிகாலை 4 மணிக்கு மேல் வழக்கம் போல் பேருந்து சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல புயல் காரணமாக சென்னை செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.