திருப்பூரில் விஷவாயு தாக்கி கொடூரம்.. 4 வடஇந்திய இளைஞர்கள் பலி!
திருப்பூரில் விஷவாயு தாக்கி 4 வடஇந்திய ஊழியர்கள் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர்: திருப்பூரில் விஷவாயு தாக்கி 4 வடஇந்திய ஊழியர்கள் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் அருகே கருமாரம்பாளையம் பகுதியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அங்கிருந்து தனியார் சாய ஆலையின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய 4 வடஇந்திய ஊழியர்கள் அழைத்து வரப்பட்டு இருக்கிறார்கள்.

கோவையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் திருப்பூர் கருப்ப கவுண்டம்பாளையத்தில் யுனிட்டி வாஷிங் என்ற சாய சலவை ஆலையை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் சாய சலவை ஆலைகள் சேகரமாகும் கழிவு நீரை அடைத்து வைத்திருந்த தொட்டியை இன்று சுத்தம் செய்யச் சென்ற அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் பருக் அகமது என்பவர் உள்ளே மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இவரைக் காப்பாற்ற ஒன்றன் பின் ஒன்றாக அன்வர் உசேன், அபு, தில்வார் உசேன் என உள்ளே இறங்கிய நிலையில் அனைவரும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர். உள்ளே விழுந்தவர்களை மேலே தூக்கிய நிலையில் மூவர் உயிரிழந்தனர்.

உயிருக்கு போராடிய நிலையில் இருந்த தில்வார் உசேனை திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வீட்டுக்கழிவுகளை அகற்றும் போதே இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்ற விதி உள்ள நிலையில் ரசாயன கழகவுகள் சேகரமாகும் கழிவு நீர் தொட்டியை போதிய பாதுகாப்பின்றி வாளி மூலம் தூய்மைபடுத்தியது தெரியவந்துள்ளது.
இவர்கள் நான்கு பேரின் உடல்கள் தற்போது பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications