ஓடும் பஸ்ஸில் பாலியல் சேட்டை.. சிம்பிள் ஆயுதத்தால் கும்மாங்குத்து குத்திய பெண் அட்வகேட்.. வீடியோ
சென்னை: மதுரவாயலில் அரசு பேருந்தில் பெண் வழக்கறிஞரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த பாலியல் சீண்டல் வீடியோ சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நேற்று வேலூருக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் தனது தாயுடன் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது பின் சீட்டில் அமர்ந்திருந்த ராகவன் (40), என்பவர் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறியதைடுத்து வானகரம் அருகே அரசு பஸ் நிறுத்தப்பட்டு மதுரவாயல் போலீஸாசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின் சீட்டிலிருந்து
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த நபர் பின் சீட்டிலிருந்து பெண் வக்கீலிடம் தவறாக நடக்க முயலும் போது சட்டை ஊக்கை வைத்து அந்த நபரின் கையில் குத்தி விட்ட காட்சிகள் பதிவாகின. ஊக்கில் குத்தும் போது கையை எடுப்பதும், பின்னர் கையை விடுவதும் என அந்த நபர் இருந்தார்.

பெண் வழக்கறிஞர்
இதையடுத்து அந்த பெண் வழக்கறிஞர் போலீஸாரிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் செய்தார். இதையடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ராகவன் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலியல் சீண்டலுக்குள்ளான பெண் துணிச்சலாக இந்த பிரச்சினையை அணுகிய விதத்திற்கு நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.

பாலியல் குற்றங்கள்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது அதிகரித்து வரும் நிலையில் எல்லா பெண்களும் இது போன்று துணிச்சலாக தங்களுக்கு எதிரான குற்றத்தை அணுக வேண்டும். குடும்ப மானம், கோர்ட், கேஸுனு அலை வேண்டியிருக்கும் என்ற சாக்கு போக்குகளை புறந்தள்ளிவிட்டு பெண்கள் தைரியலட்சுமியாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.

பாலியல் புகார்கள்
ரயில்களிலும் இது போன்ற பாலியல் புகார்கள் அதிகரித்துவிட்டன. இதனால் ரயில்களிலும் இரவு நேர பேருந்துகளிலும் பாதுகாப்புக்கு ஒரு போலீஸார் வலம் வர வேண்டும் என்பது பெண்களின் கோரிக்கையாக இருக்கிறது. மேலும் இவ்வாறு பிடித்துக் கொடுக்கப்படும் நபர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications