பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை! தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்! சென்னையில் 4000 போலீஸ் குவிப்பு
சென்னை: பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா உள்பட 8 அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில் தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா எனும் அமைப்பு பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுதல், பயிற்சி அளித்தல், தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆட்களை சேர்த்தல் உள்ளிட்டவை செய்வதாக தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த தகவலை அடுத்து கடந்த வாரம் நாடு முழுவதும் அதாவது 11 மாநிலங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத் துறை அமைப்பு ஆகியவை ரெய்டு நடத்தின.

முக்கிய ஆவணங்கள்
இந்த ரெய்டில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. நாடு முழுவதும் 106 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இந்த ரெய்டு குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுடன் அமைச்சர் அமித்ஷா அன்றைய தினமே ஆலோசனை நடத்தியிருந்தார்.

எதிர்ப்பு
இந்த கைதுக்கும் ரெய்டுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் ஆங்காங்கே போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. இதனிடையே தமிழகத்தில் பாஜக அலுவலகம், பாஜக நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் நடந்தன.

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா
இந்த சம்பவம் தொடர்பாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த சிலரை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த அமைப்பு எப்போது வேண்டுமானாலும் தடை செய்யப்படலாம் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்பட 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

உஷார் நிலை
இந்த தடையால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் உஷார் நிலை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் உள்ள பிஎஃப்ஐ அலுவலகங்களுக்கு நிர்வாகிகள் செல்ல முடியாத வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீஸார் இரும்பு தடுப்புகளை அமைத்து கண்காணித்து வருகிறார்கள். சென்னையில் மட்டும் 4 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications